பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/766

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

நெல்–ஐவனம்–தோரை
ஒரைசா சட்டைவா (Oryza sativa, Linn.)

சங்க இலக்கியங்களில் ‘நெல்’ பொதுவாகவும் ‘ஐவனம்’ என்ற வெண்ணெல்லும், செந்நெல்லும், ‘தோரை’ என்ற மலை வளர் நெல்லும் சிறப்பாகவும் பேசப்படுகின்றன. நெற்பயிர் 4 அடி உயரம் வரையில் வளரும் ஓராண்டுச் செடியாகும். 4-6 மாதங்களில் நெல்லை விளைவிக்கும் புதுப்புது நெல் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல் நமது இந்திய நாட்டில் அதிலும் தண் தமிழ்நாட்டில் தொன்று தொட்டுப் பயிரிடப்பட்டு வரும் உணவுப் பொருள்.

சங்க இலக்கியப் பெயர் : நெல்–ஐவனம்–தோரை
தாவரப் பெயர் : ஒரைசா சட்டைவா
(Oryza sativa, Linn.)

நெல்–ஐவனம்–தோரை இலக்கியம்

சங்க இலக்கியங்கள் ‘நெல்’, ‘ஐவனம்’, ‘வெண்ணெல்’, ‘செந்நெல்’, ‘தோரை’ என்ற சொற்களால் நெல்லைக் குறிப்பிடுகின்றன. மேலும், ‘அரி’ என்ற சொல்லும் காணப்படுகிறது.

“நெல் அரியும் இருந்தொழுவர்” -புறநா. 24 : 1
“கழைவளர் நெல்லின் அரிஉலை ஊழ்த்து” -மலைபடு. 180

மலைபடுகடாத்து இவ்வடிக்கு, ‘மூங்கிலிலே நின்று முற்றிய நெல்லின் அரிசியை உலையிலிட்டு’ என்று உரை கூறுவர். ஆகவே ‘அரி’ என்ற சொல் நெல்லரிசியைக் குறிப்பிடுகின்றது.

“ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி” -மதுரை. 288