பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/769

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

753

இங்ஙனம், அயல் மகரந்தச் சேர்க்கை நிகழுதற்குத் துணையாக மலட்டு உமிகள் வாயவிழ்வதும் மலருக்குள் காற்று நுழைவதும் இயற்கையில் நடைபெறுகின்றன. இத்தாவரவியல் உண்மையைப் பெருங்கௌசிகனார் கூறுவது அறிந்து மகிழ்தற்பாலது.

“பால் வார்பு கெழீஇப் பல்கவர் வளிபோழ்பு
 வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல்”
-மலைபடு. 114-115


இதற்கு ‘ஐவனம் என்ற வெண்ணெல் பலவாய்க் கவர்ந்த காற்றினாலே ஊடறுக்கப்பட்டுப் பால் கட்டி நன்றாக விளைந்தன’ என்று பொருள் கோடல் பொருந்தும்.

இனி, நெல்லின் பூக்கள் வரப்புகளில் உள்ள நண்டு வளையில் உதிர்ந்து நிறைந்துள்ளதை ஐங்குறு நூறு கூறும்.

“. . . . . . . . . . . . களவன்
 தண்ணக மண்அளை நிறைய நெல்லின்
 இரும்பூ உறைக்கும் ஊரற்கு இவள்”
-ஐங்கு. 30 : 1-3


மகளிர் வெண்ணெல்லை உரலில் இட்டு உலக்கையால் குத்தி அரிசியாக்கி, உலையிலிட்டுச் சோறாக்குவதைப் புறநானூறு கூறக் காணலாம்.

“அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
 தொடிமாண் உலக்கைப் பரூஉக்குற்று அரிசி
 காடி வெள்உலைக் கொளீஇ”
-புறநா. 399 : 1- 3


அதியமான் நெடுமான் அஞ்சி, ‘எருதுகள் உழைத்து விளைந்த செந்நெல்லைப் போரோடும் நல்கினான்’ என்பர் ஔவையார்.

“பகடுதரு செந்நெல் போரோடு நல்கி” -புறநா. 390 : 22


செந்நெல்லை மயில் உண்ணும் என்கிறார் அடைநெடுங் கல்வியார்.

“செந்நெல் உண்ட பைங்தோட்டு மஞ்ஞை” புறநா. 344 : 1


மாலைப் பொழுதில் பித்திகம் மலர்கின்றது. மகளிர் பொழுது அறிந்து, இரும்பினால் செய்த விளக்கில் நெய் தோய்த்த திரியைக் கொளுத்தி, விளக்கேற்றி நெல்லும், மலரும் தூவிக் கை தொழுது வணங்குவர் என்பதை நெடுநல்வாடை கூறும்.

 

73–48