பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/773

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



757

தாவர இயல்பு : இரண்டடி உயரம் வரை கலித்துத் தழைத்து வளரும் புல். இதில் நறுமணம் உண்டு. புல்லின் தண்டு, இலையிலெல்லாம் சுரப்பிகள் உள்ளன. பெரிதும் வறண்ட நிலப் பகுதிகளிலும், மலைப் பாங்கான பகுதிகளிலும் தாமாகவே செழித்துப் பல்லாண்டு வளரும். குத்துக் குத்தாகத் தோன்றும்
இலை : தட்டையானது; நீளமானது; சொரசொரப்பானது.
மஞ்சரி : இரண்டாகக் கிளைத்த நுனி வளர் பூந்துணர். பெரிதும் ஒரு கிளை இணர்க் காம்பின்றி இருக்கும். மற்றொன்று, நீண்ட காம்புடன் கிளைத்து, எழுந்து, கலப்பு மஞ்சரியாக வெளியில் விரிந்து வளரும்.
இலைக் காம்பு : இதில் ‘குளும்’ எனப்படும் இணர்க் கிளை உண்டாகும். விதையுண்டாகும் குளுமிற்குப் ‘பர்டைல் குளும்’ (Fertile glume) என்று பெயர்; இது நீளமாக இருக்கும்.
மலர் : இரு பாலானது; இதில் பாலியா இல்லை; ‘லாடி குயூல்ஸ்’ இரண்டு; தாதிழைகள் மூன்று; சூல்தண்டு இரு பிளவுள்ளது.
கனி : தானியம் எனப்படும் புல்லரிசி சற்று நீண்டும், அகன்றும், இரு முனைகளும் குறுகி இருக்கும்.

இப்புல்லை விலங்குகள், அதிலும் கவரிமான் விரும்பித் தின்னும்; இப்புல்லில் ஒருவகை நறுமண எண்ணெய் உள்ளது. அதனால் இப்புல் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.