பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

ஐயவி
பிராசிக்கா ஆல்பா‌ (Brassica alba, H. f.& T.)

‘ஐயவி’ என்பது சிறிய வெண்கடுகுச் செடி. ஓராண்டுச் செடி. வெண்கடுகுக்காக இது பயிரிடப்படுகிறது.

சங்க இலக்கியப் பெயர் : ஐயவி
தாவரப் பெயர் : பிராசிக்கா ஆல்பா
(Brassica alba, H. f. & T.)

ஐயவி இலக்கியம்

சிறுவெண்கடுகு எனப்படும் ஐயவி, ஒரு சிறுசெடி இரண்டடி உயரம் வரையில் ஓங்கி வளரும். இது ஐவன வெண்ணெல் விளைந்த கொல்லையில், அதன் கதிர்களோடு பிணங்கி வளருமென்பர் மாங்குடி மருதனார்.

“............நெடுங்கால் ஐயவி
 ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி

-மதுரைக்.287-288

போரில் புண்பட்ட வீரர்களைப் பேய்க் கணம் தீண்டாதிருக்கும் பொருட்டு ‘ஐயவி’யைப் புகைப்பர் என்றும், ஐயவியைச் சிதறுவர் என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

“வேம்பு மனை ஒடிப்பவும், காஞ்சிப் பாடவும்
 நெய்யுடைக்கையர் ஐயவி புகைக்கவும்
-புறநா. 296:1-3


“ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
 இசைமணி எறிந்து, காஞ்சிபாடி
 ..........காக்கம் வம்மோ
-புறநா. 281:4-5

ஐயவி ஆரல் மீனின் முட்டை போன்றது என்பர்.

“ஆரல் ஈன்ற ஐயவி முட்டை-புறநா. 342 : 9

ஐயவி மிகச் சிறியது. அதன் நிறை மிகக் குறைவானது. வான்மீகியார் என்ற புலவர், வையகத்தையும் மனிதன் நோற்கும் தவத்தையும் துலாக்கோவில் நிறை போடுகிறார். தவத்திற்கு முன்னே, ஐயவி நிறைக்குக் கூட வையகம் நிறை போகாது என்று கூறுகின்றார்.