பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/784

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

தெறுழ்வீ

‘தெறுழ்வீ’ என்ற இம்மலர் குறிஞ்சிப்பாட்டில் இடம் பெறாவிடினும் புறநானூற்றிலும், நற்றிணையிலும் பேசப்படுகின்றது. இது ஒரு வலிய கொடி மலர்; இக்கொடி கருமை நிறமானது. இது வெளிர்மஞ்சள் நிறமான மலர்களைக் கொத்தாக அவிழ்க்கும். இம்மலர்கள் வரகரிசியைப் பொரித்த பொரி போன்றவை. இக்கொடி தண்ணிய புறவில் கார் காலத் தொடக்கத்தில் காலை நேரத்தில் பூக்கும். மழைத் தண்ணீரால் தன்னுடைய வெளிர் மஞ்சள் நிறம் மாறி வெண்ணிறமாகத் தோன்றும்.

சங்கவிலக்கியத்தில் ‘தெறுழ்வீ’ என்னும் இம்மலரைப் பற்றிய செய்திகளை இவ்வளவிற்குத்தான் அறிய முடிகிறது. இவற்றைக் கொண்டு இதன் தாவரப் பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சங்க இலக்கியப் பெயர் : தெறுழ்வீ
தாவரப் பெயர் : தெரியவில்லை

தெறுழ்வீ இலக்கியம்

தெறுழ்வீ என்னும் இம்மலர், குறிஞ்சிப் பாட்டில் இடம் பெறவில்லை. எனினும் கபிலர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றில் இம்மலர் குறிப்பிடப்படுகிறது.

“கார்பெயல் தலைஇய காண்பின் காலைக்
 களிற்று முகவரியின் தெறுழ்வீ பூப்ப”
-புறநா. 119 : 1-2


இதனால் இம்மலர் கார் காலத் தொடக்கத்தில் பூக்கும் எனவும், கண்ணிற்கினிய காலை நேரத்தில் பூக்கும் எனவும், களிற்றின் நெற்றியில் தோன்றும் புள்ளிகளைப் போன்ற வடிவில் இப்பூ பூக்கும் எனவும் அறியலாம்.