பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/785

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

769

அடுத்து மதுரை மருதன் இளநாகனார் இம்மலரைக் குறிப்பிடுகின்றார்.

“வருமழைக் கெதிரிய மணிநிற இரும்புதல
 கரைநிறம் படுத்த நல்லிணர்த் தெறுழ்வீ”
-நற்றி. 302 : 4-5


இதனால் இப்பூ, வருகின்ற மழையை நோக்கி மலரும் எனவும், நீலமணி போன்ற வலிய புதர்களில் ஏறிப் படர்ந்து பூக்கும் கொடி மலர் எனவும், நல்ல பூங்கொத்தாகப் பூக்கும் எனவும், மழையில் தோய்ந்ததால், தன் வெளிர் மஞ்சள் நிறம் மாறி வெண்மை நிறமாகி விட்டதெனவும் அறியலாம்.

மேலும், மதுரை கண்ணங்கூத்தனார் இம்மலரைச் சிறு விளக்கங்களுடன் பாடியுள்ளார்.

“கருங்கால் வரகின் பொரிப்போல் அரும்புஅவிழ்ந்து
 ஈர்ந்தண்புறவில் தெறுழ்வீ மலர்ந்தன
 சேர்ந்தன செய்குறி வாரார் அவர்என்று
 கூர்ந்த பசலை அவட்கு”
[1]

இதனால் இத்தெறுழ்வீ, தண்ணிய புறவில் பூக்கும் எனவும், கருங்கால் அரும்பவிழ்ந்து பூக்கும் எனவும், மலர்கள் வரகரிசியைப் பொரித்த பொரி போன்றவை எனவும் அறியலாம். இது கொண்டு, இதனை ‘வரகுப் பொரிமலர்’ என்பர் கோவை. இளஞ்சேரனார். வரகுப் பொரி வெளிர் மஞ்சள் நிறமானது என்பது கருதத்தக்கது.

இம்மலரைப் பற்றிய சங்கவிலக்கியப் பாடல்கள் மூன்றிலும், தெறுழ்வீ என்றே குறிப்பிடப்படுவது உற்று நோக்குதற்குரியது. இவையன்றி, இம்மலரைப் பற்றிய குறிப்புகள் எங்கும் காணப்படவில்லை. இம்மலரைப் பற்றி இம்மூன்று சங்கப் பாடல்களில் இரண்டு பாக்களுக்கு உரை எழுதியவர்கள் சிறு குழப்பம் விளைவித்துள்ளனர். ஆதலின், இதனைத் தெளிவுபடுத்துவது இன்றியமையாததாகின்றது.

புறநானூற்றுப் பழைய உரைகாரர் இதனைப் புளிமா என்று உரைப்பாரும் உளர் என்பது பொருந்தாது. ஏனெனின் தெறுழ்வீ கொடியில் பூக்கும், புளிமா ஒரு சிறு மரம் ஆதலின் என்க.

 

  1. கா. நா. 25