பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

சங்க இலக்கியத்

“. . . . . . . . . . . . . . . . . . . மீமிசை
நாக நறுமலர் உதிர”-திருமுரு. 301-302

என்றார் நக்கீரர்.

“நீள்நாக நறுந்தண்தார் தயங்கப் பாய்ந்தருளி”-கலி. 39 : 3
நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்”-மலை படு. 520

இவற்றிற்கெல்லாம் உரை எழுதிய நச்சினார்க்கினியர் குறிஞ்சிப் பாட்டடியில் வரும் (94) ‘நாகம்’ என்பதற்கு ‘நாகப்பூ’ என்றும், மலைபடுகடாத்தில் வரும் (520) நாகம் என்பதற்குப் ‘புன்னைப்பூ’ என்றும், பிறவிடங்களில் வரும் நாகம் என்பதற்குச் ‘சுரபுன்னை’ என்றும் உரை கூறியுள்ளார். இவரே வழை என வரும் சங்கப்பாக்களில் ‘சுரபுன்னை’ என்றாராயினும்,

“மணிமலர் நாகம் சார்ந்து வழையொடு மரவ நீழல்”[1]

என வரும் சீவக சிந்தாமணிப் பாடலில் (1969) நாகமும், வழையும் ஒருங்கே கூறப்படுதலின் ‘வழை’ என்பதற்குச் சுரபுன்னையுமாம் என்று கூறி, ‘நாகம்’ என்பதற்கு ‘நாகம் ஒரு வகை மரம்’ என்று உரை கண்டுள்ளார்.

திருத்தக்கதேவர் இங்ஙனம் நாகத்தையும் வழையையும் தனித்தனியாகக் கூறியது போலவே,

“நல்லிணர் நாகம் நறவம் சுரபுன்னை”-பரிபா. 12 : 80

என்று நல்வழுதியாரும், ‘நாகத்தையும், சுரபுன்னையையும்’ தனித்தனியாகப் பாடியுள்ளார். குறிஞ்சிக் கபிலரும், பெருங்குறிஞ்சியில், ‘நாகத்தையும்’ (94) ‘வழையையும்’ (83) தனித்தனியாகப் பாடியுள்ளார்.

ஆதலின் சங்க நூல்களில் துறைபோகிய ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘நாகம்’ என்பதற்கு 1) சுரபுன்னை 2) நாகப்பூ 3) புன்னைப்பூ என்று மூன்று உரைகளைக் கூறுமாறு யாங்ஙனம்?

நெய்தல் நிலத்திற்குரிய கருப்பொருள்களில் புன்னைமரம் ஓதப்படுதலானும், சங்க இலக்கியப் பாக்களில் புன்னை மலிந்து காணப்படுதலானும்,

“நந்தி நறவம் நறும்புன்னாகம்”-குறிஞ். 91

 

  1. சீ.சிந் : 1969