ஆய் என்பவனும் கடையெழுவள்ளல்களில் ஒருவன். இவன் ஆய் எனத் தனிப்பெயராலும் ஆய்-அண்டிரன் எனத் தொடர்ப் பெயராலும் அழைக்கப்படுவன். இவன் உழுதுண்ணும் வேளாளர், உழுவித்துண்ணும் வேளாளர் எனப் பாகுபடுத்திக் கூறப்படும் வேளாண் மரபில் உழுவித்துண்ணும் வேளாளர் மரபினன். வேளாளர்கட்குரிய தனியுரிமைப் பெயராக விளங்கவல்ல - வேள் என்னும் பட்டப்பெயர் அரசர்களால் அளிக்கப்பட்ட அரும் பெருமை அமையப்பெற்றவன். ஆகவே, இவன் ஆய் வேள் என்றும் வேள் ஆய் என்றும் கூறப்படுபவன்.
ஆய் அண்டிரன் பாண்டிய நாட்டில் பெருமைக்கோர் உறைவிடமானதும், அகத்தியர் வாழ்ந்த அழகிய இடமும் ஆன பொதிகை மலைக்குத் தலைவனாக இருந்து வந்தான். அப்பொதிகை மலைக்கு அண்மியதான ஆய் குடிக்குத் தலைவனும் இவனே.
ஆய் தலைசிறந்த வீரனும் ஆவான். வீரமன்னர்களான சேர சோழ பாண்டியர்கட்கு முறையே பனை, ஆத்தி, வேம்பு மாலைகள் அடையாளமாக அமைந்திருப்பனபோல, இவனுக்குச் சுரபுன்னை மாலை அடையாளப் பூவாகும். இவனைப் பகை அர