பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

113


தசைப் பகுதிகள் தளதளவென்று இருந்தாலும், தன்னிச்சைக்கு ஏற்றாற்போல் வளைந்து செயல்பட வேண்டும் என்றால், அதனைப் பதமாக்கும் பயிற்சி களினால்தான் மெருகேற்ற வேண்டும். அப்பொழுது தான் தசைகள் தங்கள் முழு வலிமையையும் வெளிக்கொண்டு வர முடியும். அதனால்தான் எந்தவித வலியுமின்றி, இடத்திற்கு ஏற்றாற்போல் இணைந்து இயங்க முடியும். இல்லையேல் பிடிப்பு ஏற்பட்டு, வேதனையால் துடித்துத் துவண்டு கிடக்க நேரிடும். ஆகவே, ஆட்டக்காரர்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்கள், ஆட்டம் தொடங்குவதற்கு முன் அவர்களை நன்கு சூடேற்றும் பதமாக்கும் பயிற்சிகளில் ஈடுபடுத்திட வேண்டும்.

குறிப்பு: அதற்கான பயிற்சிகள் பின் பகுதிகளில் தரப்பட்டிருக்கிறது.

4. சடுகுடு ஆட்டத்திற்கு உடையும் முக்கியமானது தான். கிராமப்புரங்களில் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு, மேலே திறந்த மேனியராய் விளையாடுவது அந்நாள் பழக்க வழக்கமாக இருந்து வந்தது. காலம் மாற மாற, ஆட்டத்தில் புதுமைகள் சேரச் சேர, உடைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. விதிகளும் விளைந்தன.

திறந்த மேனியில் பனியன் போட்டாக வேண்டும், அதில் ஆடும் எண்ணையும் பொறித்திருக்க வேண்டும் என்பதுடன், உள்ளே லங்கோடு அல்லது ஜட்டி அணிந்து, அதன் மேல் கால் சட்டையும், கால்களில் காலணிகளும் அணிந்திருக்க வேண்டும் என்பது ஒரு விதி.