13 * சத்திய ஆவேசம்
அந்தப் பெண், வாயடைத்து, கண்ணடைத்து, கல்லூரிக் கதவின் முனையைப் பிடித்தபடி, வேறு புறமாகத் திரும்பி, தன் முகத்தை மறைத்துக் கொண்டாள். அழுகையை அடக்கியவள், இப்போது அழுகையால் அடக்கப்பட்டவள் போல், உடல் குலுங்கக் கேவினாள். மாணவர்கள் மத்தியில் கசாமு.சா.
முத்தையா இடைமறித்தான்.
"பிரபு இப்படிப் பேசுனது தெரியாது. ரகளை வந்த பிறகுதான் இங்கே வந்தோம். என்னப்பா. இது."
பிரபு, குத்துக்கல்லாய் நின்றான்.
முத்தையா, சுற்றுமுற்றும் பார்த்தான். மாணவர்கள், மெளனிகளாய் நின்றார்கள். யார் மீதோ உள்ள கோபம், எதன் மீதோ காட்டப்பட வேண்டிய வேகம், குறி தவறிப் போனது போன்ற உணர்வு. முத்தையா, இன்னும் அழுகையை விக்கலாக்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் நேர்முகமாய்ப் பேசினான்.
"ஐ அம் ஸாரி மேடம். பிரபு சார்பில் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பெரிய மனசு வைத்துப் பொறுத்துக்கணும். பிரது அப்படி பேசுனது மிருகத்தாமானது... எனது வீட்டு பெண்களையும், இவன் அப்படிக் கேட்டது மாதிரியே உணர்கிறேன். இது சொல்லத் தகாத வார்த்தை. இப்படிச் சொல்லிட்டான்னு கூட திருப்பிக் கூற முடியாத வார்த்தை. தயவு செய்து எங்களோட மன்னிப்பை நீங்க ஏற்றுக்கணும்"
அவள், தான் கேட்டதை நம்பாதவள் போல் காதுகளை கரங்களால் தடவிக்கொண்டே, திரும்பினாள், பிறகு, சங்கடமாகச் சிரித்த படியே, ஐ அம் ஆல்ஸோ ஸாரி. நானே ஒரு பிரச்சனையாயிட்டேன் என்று சொல்லிக் கொண்டே, கல்லூரிக்குள் நுழையாமல் திரும்பி நடக்கப் போனாள்.
முத்தையா, அவளைத் தடுப்பதுபோல், வலதுகரத்தை தோளுக்குக் கீழே இறக்கி, குறுக்காக நீட்டிக் கொண்டே ஒங்க அப்பாவை பார்த்துட்டுப் போங்க. ஒருவேளை. டிரஸ்ட்போர்ட்காரர்கள், ஒங்கப்பா கையை முறிச்சிட்டு. எங்கமேல பழி போடலாமில்லையா? போய்ப் பாருங்க. அதோட போலீஸ் லாக்கப்புல எங்க பையன்கள் அடி உதையை தின்னுக்கிட்டு, சுகமாய் இருக்கிறதாய் அப்பாகிட்ட சொல்லுங்க. என்றான்.
அவள், சிறிது தயங்கினாள். கைகளைப் பிசைந்து கொண்டாள். பின்னர், எல்லோரையும், தர்ம சங்கடமாய் பார்த்தபடியே, கல்லூரி வாசலுக்குள் தத்தி தத்தி சென்று, பின்னர் தாவுவது போல் நடந்தாள்.