15 * சத்திய ஆவேசம்
'என் ரத்தம் கொதிக்கறதால அப்டி எழுதினேன். நம்ம தோழர்கள் பதினோரு நாளாய் லாக்கப்புல துடிக்கையில், எவனுக்கும் இலக்கண சுத்தமான கோஷம் வராது. அப்படி வந்தால் அவன்.
"சரி. நான் அயோக்கியன்னே வச்சுக்கலாம். ஒன் ரத்தம் கொதித்திருக்கலாம். நம்ம மாணவர்களை போலீஸ் நிலையத்துல போய், இந்த பதினோரு நாளையில் ஒரு நாளாவது பார்த்தியா. ஆறுதல் சொன்னியா."
முத்தையாவுக்கும் பிரபுவுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை, மாணவர்கள் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தபோது, உருவத்தைக் காட்டாத - ஒரு குரல் ஒலித்தது.
"பிரபு ஏன் லாக்கப் பசங்கள பார்க்கலன்னா. அவங்களப் பார்த்து. அதனால. ஏற்கனவே கொதித்த ரத்தம் மேலும் கொதித்து ஆவியாகிட்டால் என்னாகும்? அதான் போகல. இன்னைக்கு அங்கே போறானோ என்னவோ. அந்தப் பக்கமாய் போவான். அங்கே ஒரு தியேட்டர்ல, ஒரு ஏ படம் ரிலீஸ்..."
மாணவர்கள் சிரித்தார்கள். அந்த ஜோக்கை ரசித்ததுபோல், முதலில் பிரபுவும் சிரித்தான். பிறகு அந்தச் சிரிப்புபோல் எங்கேயோ மறைந்து விட்டான்.
முத்தையா, மாணவர்களை உஷார் படுத்தினான்.
"நாம் வெறும் மாணவர்கள். யாராவது நம்மைக் காலால் உதைச்சு, கையால் அணைத்தால், காலை மறந்துட்டு, கைகளை மட்டுமே பார்க்கிற சாதி. இரண்டு நாளையில் நம்மோட போராட்டம் பிசுபிசுத்துப் போயிடுமுன்னு எதிர்பார்த்து ஏமாந்த கல்லூரி நிர்வாகம், ஏதோ சூழ்ச்சி செய்திருக்கு. இல்லையானால், பிரின்ஸ்பால் மகளிடம் இப்படி பொய்ச் செய்தி கொடுத்திருக்க வேண்டாம். அந்தப் பெண் இங்கே வந்தால் ரகளை நடக்குமுன்னு எதிர்பார்த்திருப்பாங்க... இப்போ அது நடக்காததினால், வேற பிளான் போடுவாங்க."
மாணவர்கள், முத்தையா மேலும் பேசுவதற்குக் காத்திருக்க வில்லை. தங்களை அறியாமலேயே தானாக முழங்கினார்கள். கையமர்த்தி அமைதிப்படுத்தப் போன முத்தையாவும், முதலில் அந்த முழக்கங்களுக்குக் கட்டுப்பட்டு, அப்புறம் அவனும் சேர்ந்து முழங்கினான். கோஷங்களால் கல்லூரிக் கதவு அதிர்வது போலிருந்தது. லத்திக் கம்புகள் சுழலப் போவதுபோல் தோன்றின.