பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

சிஷ்: தம்பிரான் கண்ணோடு புதைய வேண்டும்.

லலி: சரி! பார்க்கிறேன்.

சிஷ்: அதோ தம்பிரான் வருகிறார், (சிஷ்யன் மறைகிறான்)

மடாதி: வர்ணனையை விட வஸ்து நன்றாகவே இருக்கிறது. உட்கார். உன்னை பார்த்து என் கண் பூரித்து விட்டது.

லலி: ஏன் இவ்வளவு தாமதம்?

மடாதி: காலையெல்லாம் சைவத்தைச் சுமந்து நொந்தேன், கட்டழகி! மடத்திலேயோ மன்னார்சாமிகள் வருவதும் போவதும் ஓயவில்லை.

லலி: கனிரசம் அருந்துகிறீர்களா?

மடாதி: உன் பவழ வாயை விடவா இது சுவைக்கும்? உன் இதழோரத்தில் நெழிந்தோடும் ரசத்தை விட கனிரசமா ருசியாயிருக்கும்?

லலி: ஏதாவது பாடட்டுமா?

மடாதி: பாடு.

(மணவாளன் இவர்தானடி- பாடல்)

மடாதி: திவ்யமான சாரீரம்! எங்கடி சிட்க்ஷை?

லலி: பண்ணையூர் பார்த்தசாரதி அய்யங்காரிடம் ஐந்து வருஷம் சிட்க்ஷை பெற்றேன்.

மடாதி: ஓ! அவருக்கு ஒரு மகள் கூட உண்டு.

லலி: நல்ல சிவப்பு.

மடாதி: உன்னை விடவா! நீ தான் முதல்! ரகம்!

லலி: எல்லாம் இப்படி விடியும் வரைதான் விளையாடுவோம்.

மடாதி: ஏன்?

லலி: இன்னும் மூன்று நாட்கள் தான் இந்த ஊரில் இருப்பேன். தாய் வீட்டில் அதிக நாள் தங்கக்கூடாது! பிறகு அவர் வீட்டிற்கு போனால் மூன்று மாதமோ- ஆறு மாதமோ!

மடாதி: நான் அங்கு வருகிறேன்.

லலி: வேண்டாம்! அது ஒரு மாதிரியான ஊர்!

மடாதி: அப்படியா!

லலி: என் இஷ்டத்தை பூர்த்தி செய்வீர்களா!

மடாதி: கரும்பு தின்னக் கூலியா!

—★—