பக்கம்:சமணமும் தமிழும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சமணமும் தமிழும்



சு. சமணசமயம் தோன்றிய வரலாறு


சமண சமயத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் என்னும் பெயர்களும் உள்ளன.

சமணர் (ஸ்ரமணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டோரே வீடுபெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. புலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர் (வென்றவர்) ஆகலின் தீர்த்தங்காருக்கு ஜினர் என்னும் பெயர் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே, அருகனை வணங்குவோர் ஆருகதர்[1] என்றும் இந்த மதத்திற்கு ஆருகதமதம் என்றும் பெயர் கூறப்படுகிறது.

சமணக் கடவுள் பற்றற்றவர். ஆதலின் நிர்க்கந்தர் அல்லது நிகண்டர் எனப்பட்டார். அதுபற்றிச் சமண சமயம் நிகண்டமதம் எனப் பெயர் பெற்றது. மதங்கள் ஏகாந்தவாதம், அநேகாந்தவாதம் என இருவகை. சமணம்


  1. “அருகனென நிறுத்தி இவனைத் தெய்வமாகவுடையான் யாவனெனக் கருதியவிடத்து அகரத்தை ஆகாரமாக்கி, 'ஒற்று மிகும்' என்பதனாற் க‍கர வொற்றின் பின்னே தகரவொற்றை மிகுத்து, 'சுட்டு மிகும்' என்பதனால் அகரச் சுட்டை மிகுத்து, 'முன்னொற்றுண்டேற் செம்மை யுயிரேறுஞ் சிறந்து' என்பதினால் ஒற்றிலே உயிரை ஏற்றி ஆருகன் என முடிக்க” என்பது நேமிநாதம்: எழுத்ததிகாரம்: 10-ஆம் செய்யுளுரை.)