உ. சமணசமய தத்துவம்
இனி, சமண சமய தத்துவத்தைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவோம்:
'உயிரும் உயிரல்லதும், புண்ணியம், பாவம், ஊற்றம்
செயிர்தீர் செறிப்பும், உதிர்ப்பும், கட்டும், வீடும், உற்ற
துயர் தீர்க்கும் நயநெறியும் சுருக்காய் யுரைப்பன்;
மயல்தீர்ந்த காட்சியுடையோய்! இது கேண்மதித்தே'
என்பது மேருமந்தர புராணம்.
சமணசமய தத்துவத்தில் ஒன்பது பொருள்கள் கூறப்படுகின்றன. இவற்றை நவபதார்த்தம் என்பர். இவை: உயிர், உயிரல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பனவாம். இவற்றை முறையே ஜீவன், அஜீவன், புண்ணியம், பாவம், ஆஸ்ரவம், ஸம்வரை, நிர்ஜரை, பந்தம், மோக்ஷம் என்றும் கூறுவர். இவ்வொன்பது பொருள்களை விளக்குவோம்.
1. உயிர் (ஜீவன்): உயிர்கள் எண்ணிறந்தன; அழிவில்லாதன; அநாதியாக உள்ளன. அதாவது, உயிர்களைக் கடவுள் படைக்கவில்லை, நல்வினை தீவினை என்னும் இருவினைகள் (புண்ணிய பாவங்களைச்) செய்து, அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களைத் துய்ப்பதற்கு நரக கதி, விலங்கு கதி, மக்கள் கதி, தேவ கதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து இறந்து உழன்று திரிவதும் இருவினைகளை அறுத்துப் பிறவா நிலையாகிய பேரின்ப வீட்டினை அடைவதும் உயிர்களின் இயல்பாகும். உயிர்கள் ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர் என ஐந்து வகைப்படும். ஐயறிவுயிர்கள் பகுத்தறிவு (மனம்) இல்லாதவை, பகுத்தறிவு உடையவை என இருவகைப்படும்[1].
உடம்பின் பருமை சிறுமைக்கு ஏற்ப உயிரானது பெரியதாகவும் சிறியதாகவும் உடல் முழுவதும் பரந்து
- ↑ 1. தொடர்புரை I காண்க.