பக்கம்:சமணமும் தமிழும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சமணமும் தமிழும்


எனவரும் மணிமேகலை அடிகளாலும் இதனை அறியலாம். தர்மம், அதர்மம் என்னும் இவை, ஆகாயம் பரந்துள்ள வரையில் நிறைந்து இருக்கின்றன.[1]

காலம் என்பது, இமைத்தல் நொடித்தல் முதலிய சிறுகாலம் முதல் கற்பகாலம் முதலிய பெரிய கால அளவு ஆகும்.

"காலம் கணிகம் எனுங்குறு நிகழ்ச்சியும்
மேலும் கற்பத்தின்நெடு நிகழ்ச்சியும் ஆக்கும்."
                                   (மணிமேகலை 27: 191--192)

ஆகாயம் என்பது, சமண சமயக் கொள்கைப்படி ஐம்பூதங்களுள் ஒன்றன்று. தர்மம், அதர்மம், காலம், உயிர்கள், புத்கலங்கள் ஆகிய இவ்வைந்து பொருள்களும் தங்குவதற்கு இடம் கொடுப்பது ஆகாயம்.

“..... ஆகாயம் எல்லாப் பொருட்கும்
பூக்கும் இடங்கொடுக்கும் புரிவிற்கும்”
                         (மணிமேகலை, 27: 193-194)

ஆகாயம் லோகாகாயம் என்றும், அலோகாகாயம் என்றும் இரண்டு வகைப்படும். லோகாகாயம் என்பது, மேலே கூறியபடி புத்கலம் முதலிய ஐந்து பொருள்களுக்கும் இடம் கொடுப்பது. அலோகாகாயம் என்பது லோகாகாயத்திற்கு இடம் கொடுத்து நிற்பது. இவையே உயிரல்லனவாகிய அஜீவப் பொருள்களாம்.


  1. மாதவச் சிவஞான யோகிகள் தமது சிவஞானபோத மாபாடியத்திலே ஆருகத மத‍த்தைக் கூறுகிறபோது (அவையடக்கம்) “தன்ம‍ம் ... நன்மையைப் பயப்பது; அதன்ம‍ம் தீமையைப் பயப்பது” என்று எழுதியிருப்பது சமண சமய த‍த்துவக் கருத்துப்படி தவறாகும். தன்ம‍ம், அதன்ம‍ம் என்பவற்றைப் புண்ணியம் பாவம் என்னும் பொருளில் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று.