பக்கம்:சமணமும் தமிழும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சமணமும் தமிழும்


6. நின்று உண்ணல்: சமண முனிவர், நின்றபடியே உணவை உட்கொள்ள வேண்டும். இலை முதலிய உண்கலங்களில் உண்ணாமல் கையில் வாங்கிப் புசிக்க வேண்டும். தமது அன்று என்று உடற்பற்றினையும் நீக்கி விட்ட அவர்கள், அதற்குச் சுகங்கொடுத்து ஆசனத்தில் அமர்ந்து உண்கலத்தில் உண்பது அதனிடத்துப் பற்றுக் கொண்டு அதனைப்போற்றி வளர்ப்பதற்குக் காரணம் ஆகும் எனக் கருதி, இவ்வாறு நின்றவண்ணமே கையில் உண்பர்.

7. ஏக புக்தம்: ஒரு நாளைக்கு ஒரே வேளை உண்ணுதல். சமண முனிவர்களில் சிலர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை உண்ணும் விரத‍த்தையும் கொண்டிருந்தனர். எட்டு நாட்களுக்கு ஒரு முறை உணவு கொண்ட அட்டோபவாசிகள் சாசனங்களில் கூறப்படுகின்றனர். சூரியன் புறப்பட்ட மூன்று நாழிகைக்குப் பின்னரும், சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்னரும், அதாவது, பகல் நேரத்திலேயே, சமண முனிவர் ஒருவேளை உணவு கொள்ள வேண்டும்.

இதுகாறும் கூறிய இவையே சமண முனிவர் கைக்கொண்டொழுகவேண்டிய இருபத்தெட்டு மூல குணங்களாகும்.

சமண முனிவர் உடற்பற்றினைக் குறைத்துச் சக்திக்குத் தக்கபடி நோன்பிருந்தனர். இப்படிச் செய்வதை அளவுக்குமிஞ்சி செய்யாமல் தமது உடல் நிலைக்கு ஏற்றபடி செய்துவந்தனர். சமணரைக் “கடுநோன்பிகள்” என்று ஏனைய சமயத்தவர் குறைகூறியதற்கு விடையாக, நீலகேசி என்னும் சமண நூலில் கீழ்க்கண்ட செய்தி கூறப்படுகிறது.

“யாங்கள் (சமணர்) கொலை முதலாகிய பாவநிவர்த்தியார்த்தமாக சக்திக்குத் தக்கவாறு அனசனாதிகள் (உண்ணாவிரதம் முதலியன) செய்து விஷயாநுபவம் (இன்ப நுகர்ச்சி ) துறந்தனம். ................ யாங்கள் பலகாலுண்ண