பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இனமான உணர்வு தலையெடுத்து வளர்ந்தது; சங்க காலத்தில்:

“ஒரு வீரர் தோற்பினும் தோற்பதுங் குடியே!” என்று கோவூர் கிழார் இன உணர்வை அறிமுகப்படுத்தினார். அடுத்து, காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் சோழனும் பாண்டியனும் ஒருங்கிருந்த காட்சியைக் கண்டு பெருமிதமுற்று’

“இன்றே போல்க, நும் புணர்ச்சி!”

என்று வாழ்த்தினார். தமிழ்ச் சமுதாயக் கட்டமைப்புக்குத் தடையாக இருந்த சாதி, குல, வேற்றுமைகளை அப்பரடிகள் சாடினார். ஒருகுலம் காண முயன்றார். இங்ஙனம் முறையாக வளர்ந்து வந்த சமுதாய உணர்வு தலைவர் பெரியார் காலத்தில் எழுச்சி பெற்றது.

இந்த வரிசையில் நமது தலைமுறையில் வாழும் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், கவிஞர்களின் படைப்புகளைப் பற்றி எழுதப்பெற்ற நூல் இது.

நம்மிடம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய கவிஞர் குலோத்துங்கன், தொ.மு.சி.ரகுநாதன் புரட்சிக்கவி பாரதி, முற்போக்குச் சிந்தனையாளர் ஜெயகாந்தன் ஆகியோரின் படைப்புக்களைப் படித்த அனுபவத்தின் விளைவு இந்த நூல்.

இவர்களுடைய முற்போக்குச் சிந்தனைகளைத் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வத் துடிப்புடன் எழுந்தது இந்நூல்.