93
பரஞ்சோதியார், பாண்டியன் சுரந்தீர்த்த படலமும், சமணரைக் கழுவேற்றிய படலமும் பாடுகின்றார். திருவால வாயுடையார் திருவிளையாடலைப் பெரிதும் பின்பற்றிச் செல்கின்றது இவர் கதை.
பாண்டியன் சோழனை வென்றபோது சோழன் அறிவில் மிக்க குலச்சிறையையும் அழகில் மிக்க தன் பெண்ணையும் காணிக்கையாகக் கொடுத்தான்; அன்னோர் அமைச்சனும் அரசியும் ஆயினர். பாண்டியன் சமணனாகவே, இந்த இருவரும் சொக்கனைத் தொழுது "சிவநெறி என்று தழைப்பது?" என வேண்டி நிற்கையில், சோணாட்டில் தில்லையிலிருந்து சொக்கனைத் தொழவந்த மறையவர் ஒருவர், சம்பந்தர் பெருமையினையும் அவர் மறைக்காட்டிற்கு வந்திருத்தலையும் விளங்கககூறினார். அதன்மேல் அவ்விருவரும் சம்பந்தர்க்குத் திருமுகம் அனுப்பினர். அவரும் வந்தனர். பலர் சூழப் பேருலா வருகையில் அவரைச் சமணர்கள் தடுத்தனர். “மத்த வேழம் தாமரை நூலாற் கட்டத் தடை படவற்றோ!” வழக்காட இறைவனிடம் விடை கொண்டு சென்று, சம்பந்தர் வெப்ப நோய் ஒழித்தார். பின்னர், "தீயரை ஒறுத்தல் செய்யத் திருவுளம் செய்தி" என இறைவனை வேண்டினார்.
வெம்மத வேழங்காய்ந்த விடையவர் விசும்பிற் சேர்வார்
“எம்மனோ ராவீர்நுங்கட் கிசைந்ததே எமக்கும் வேண்டும்
சம்மத மானால் வெல்லத் தக்கவ ராக நீரே
அம்மதம் உடையார் தோற்கத் தக்கவாராக” என்றே,