பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

29



மத்திய சர்க்கார் ஒன்றை அமைத்து அதன்மூலம் தன் ஆட்சியை சிறுசிறு பாகங்களாக பிரித்து அதற்கேற்ற அதிகாரிகளைப்போட்டு ஆட்சியை திறம்பட நடத்திய முதல் மெளரிய மன்னன் இவன்தான். மேலும் இவன் காலத்தில்தான் பல பெரிய நகரங்களுக்கு, உலகத்தார் அதிசயிக்கத்தகுந்த வகையிலே பெரிய பெரிய ராஜபாட்டைகளைப் போட்டான். தன் தலைநகரான தட்சசீலத்திலிருந்து ஐந்து நதிகளைக் கடந்து பஞ்சாப்புக்கும், அங்கிருந்து ஜம்னா நதியை கனோஜ் வழியாகக் கடந்து பிரயாக் வரையிலும், பிரயாக்கிலிருந்து பாடலி புத்திரம் வழியாக கெங்கையின் முகத்துவாரம் வரையிலும் அழகான சாலைகளை அமைத்து அதன் இருமருங்கிலும் மரங்களை வைத்து மைல் கற்களை நட்டு அவற்றை சர்க்காரின் கண்காணிப்பிலே வைத்திருந்தான். இப்படி சாலைகளின் ஓரங்களில் மரங்களை வைப்பதானது மக்கள் வெய்யலில் கஷ்டப்படாமல் நிழலில் செல்லவேண்டு மென்ற நல்லெண்ணத்தை சமூகத்துக்கு சர்க்கார் அளிக்கும் நன்கொடையெனக் கருதியவனும் இவன்தான். ஏறக்குறைய இவைகளுக்குக் காரணமான சாணக்கியன் ஆரியனாக இருந்தும் ஜைன மதத்தைச் சார்ந்த சந்திரகுப்தன் இவனை முழுமனதோடு ஆதரித்தான் என்பதில் வியப்பில்லை. கடலாதிக்கமும் ஆற்றாதிக்கமும் இவனாட்சிக்குள் கொண்டு வந்து அவைகளில் ஒழுங்காக கப்பல்களையும் மரக்கலங்களையும் போக்குவரத்துக்கு விடச் செய்து அதை ஒரு தனி இலாகாவாக்கி அந்த நிர்வாகத்தை ஒரு மந்திரியிடம் ஒப்படைத்திருந்தான்.

நிலவரி, சுரங்கவரி, சுங்கவரி, கனிப்பொருள் வரி, வருமானவரி, வாணிப வரி, உப்பாதிக்கம் முதலானவை கள் முக்கிய வருமான இனங்களாகக் கருதப்பட்டன.