பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சரிந்த சாம்ராஜ்யங்கள்

வாளின் ஒளியைவிட ஜோதியாய், அதன் கூர்மையைவிட மகாக் கொடியதாய், மின்சாரத்தைவிட வேகமாய்ப் பாயக்கூடியதான கோதையர்களின் கண்வீச்சால் கருத்தழிந்து சரிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள். பலவித வேறுபட்ட பண்பாடுகளால் நாடுகள் ஒன்றோடொன்று முட்டி மோதி ரணகளத்தில் கைசலித்து வேறு வகையில்லாமல் வாளைத் தூர எறிந்து எதிரியின் காலடியில் தஞ்சம் புகுந்து உயிர்ப்பிச்சைக் கேட்டு மன்னர்கள் ஒடிப்போனதால் வீழ்ந்துவிட்ட சாம்ராஜ்யங்கள், அகழியில் நீர் வற்றியதால், அயலார் கோட்டையின் தலை வாயலிலே நுழைய, அதே நேரத்தில் அவர்களைத்தடுத்து நிறுத்தத் திறமற்று கோட்டையின் கடைவாயில் வழியாக கானகம் ஓடி உயிரைக் காப்பாற்றிக்கொண்ட உதவாக்கரை மன்னர்களால் வீழ்ந்துவிட்ட வல்லரசுகள்.

சட்டத்தால் மனிதன் புரத்தையும், சம்பிரதாயத்தால் மனிதனின் அகத்தையும் அடக்கி ஆண்டுகொண்டிருந்த இரட்டைக் கொள்ளைக்காரர்களான மதகுருவுக்கும், மன்னனுக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணமாக சரிந்துவிட்ட சாம்ராஜ்யங்கள். தேவையைத் தேடித் தேடித் திரிந்தும் பெறமுடியாமல் திகைத்த மக்கள் ஒருபுறமும், தேவைக்கதிகமான தேக்கத்தில் திளைத்து மதம் பிடித்து அலைந்த மன்னர்கள் ஒருபுறமும் நின்று போர் செய்து, இறுதியில் மக்கள் சக்தியை எதிர்த்து நிற்கமுடி