பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

சரிந்த சாம்ராஜ்யங்கள்


தோன்றிய மாபெரும் சாம்ராஜ்யம் ஒன்று மறைந்து போய்விட்டது." என்று சரிதப் பேராசிரியர்கள் தீர்ப்புச் சொல்லிவிட்டனர். ”இந்திய உபகண்டத்தில் இமய முதல் குமரிவரை என்றுமே, எக்காலத்திலுமே, ஒரு சாம்ராஜ்யம் தோன்ற முடியாது என்ற அழியாத உண்மையை டில்லியின் கோட்டைப் படிகளில் ஒலிக்குமாறு செய்துவிட்டது மொகலாயர்களின் தோல்வி” என்று உண்மை உள்ளம் கொண்டோர் பேசித் தீர்த்தனர்.

மொகலாயர்கள், மட்டுமல்ல மகம்மதியர்கள் மட்டுமல்ல, அரேபியர்மட்டுமல்ல, எத்தனையோ இனத்தவர்கள் ஆரியா வர்த்தத்தில் ஆதிக்கம் செலுத்த எண்ணி தோல்வியுற்றனர். மத்திய ஆசிய ஸ்டெப்ஸ் புல் வெளியில் வாழ்ந்த இனம், திராவிடர்களை, அவர்கள் கலாச்சாரத்தை அழித்து சாம்ராஜ்யம் தோற்றுவிக்க எண்ணியது. சூழ்ச்சியின் பிறப்பிடம், மாமுனிவன் சாணக்கியன் தன் கண்ணோட்டத்தை கங்கைச் சம வெளியிலே செலுத்தினான். தோல்வி கண்டான். அன்பு, அகிம்சை என்ற இரு பெரும் ஆயுதங்களைக்கொண்டு இந்திய உபகண்டத்தின் எல்லைக்குள் சாம்ராஜ்யம் ஒன்றை நிறுவ எண்ணினான், அசோகன். தோல்வியுற்றான். கனிஷ்கனால் முடியாததை, தான் சாதிக்கலாம் என்று மனப்பால் குடித்தான் சந்திரகுப்தன் அவன் சந்ததியார் தோல்வி முரசு கொட்டினர்கள்.

கஜினி படையெடுத்தான். கொள்ளைக்காரன் என்ற அடைமொழிக்கு இலக்கானான். கோரி போர் முரசு கொட்டினான். பயன் ஏற்பட்டது. நீடித்தது. ஆனால் நிலையுள்ள சாம்ராஜ்யத்துக்கு வழி செய்யவில்லை.