பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

75


முடிவு

இப்படித் தோன்றி மறைந்த பல சாம்ராஜ்யங்கள் இந்திய மண்ணில் ஒவ்வொன்றும் தன் சக்திக்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்திருக்கின்றன. காலவெள்ளம் அவற்றில் பலவற்றை மூழ்கடித்துவிட்டது. காலவெள்ளத்தின் வேகத்தைப் பொருட்படுத்தாது பல நினைவுச் சின்னங்கள், இடிந்துபோன கோட்டைகளாக, அழிக்க முடியாத அரண்மனைகளாக. மாற்றி எழுத இயலாத இலக்கியங்களாக, இன்றும் நம்மிடையே இருக்கின்றன. அந்தச் சின்னங்கள் சொல்லும் சோகக் கதைகள் அநேகம். ஏகாதிபத்தியத்தை உருவாக்கவேண்டும், ஆதிக்கம் செலுத்தவேண்டும். மக்களை அடிமைகொள்ள வேண்டும், ஆட்சியின்மூலம், தன் புகழை நிலைநாட்ட வேண்டுமென்று எண்ணுவோருக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் தோன்றி மறைந்த சாம்ராஜ்யங்கள் உலகிற்கு நல்ல படிப்பினையைத் தந்துள்ளன. உலகிலே எண்ணற்ற சாம்ராஜ்யங்கள், சரித்திரத்திலே இடம் பெற்றவை, சரித எடுகளில் இடம் பெறாதவை, புகழ் பெற்றவை, புகழ் எணியின் முதற் படியில் கால்வைத்து தடுமாறி மாற்றாரின் எதிர்ப்பால் மறைந்துபோன சாம்ராஜ்யங்கள், வாள்முனை அமைத்துத் தந்த சாம்ராஜ்யங்கள், வேல்விழியாள் தயவில் தோன்றிய சாம்ராஜ்யங்கள், படைபலம் ஒன்றின் துணையால் மட்டும் தோன்றிய சாம்ராஜ்யங்கள், கொந்தளிக்கும் அரசியல் சூழ்நிலையில், சந்தர்ப்பவாதிகள் ஏற்படுத்திய அரசுகள், மகா வீரர்களின் மறைவால் தலை நீட்டிய தனியரசுகள், ஆகிய எண்ணற்ற அரசுகள் தோன்றியிருக்கின்றன.