பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சேர்க்கின்ற வேற்றுமை பற்பல; நம்மினம்
செய்த கொடுமைகள் பற்பல!-தீமை
வேர்க்கின்ற உள்ளங்கள் பற்பல!கூசிடும்
வெட்டிப் பொறாமைகள் பற்பல!
ஆர்க்கின்ற நூல்களால் என்னபயன்? கோடி
அறங்கள் முழக்கிடும் நூல்களேன்? - நாம்
யார்க்கவை சொல்லத் துடித்திடுவோம் ? நம்மை
யாருக்கிங் கே,விலை போக்குவோம்?

'சாதி'ப் புழுக்கள் நெளிந்திடு மோர்மொத்தைச்
சாணித் திரளையாய் வாழ்கையில்-நாம்
ஓதி யுணர்ந்திட்ட மக்களைப் போல்; உல
கோருக் குரைக்கத் துடிக்கிறோம்!
காதுயிர்ப் பற்றசெ விடர்களாய், இரு
கண்களி லாத குருடராய்-நில
வீதி யுலாவரப் பார்த்திடு வோம்! என்ன
வேட்கையில் இங்ஙணம் செய்குவோம்?


முன்னம் பிறந்தவர் என்பதனால் உயர்
மூதுரை சொல்லத் துடிக்கிறோம்-எனில்
சின்னஞ் சிறியராய் வாழ்ந்திடு வோம்;மனச்
சிறுமையி னால்புழு வாகிறோம்!
இன்னும் நினைக்க மறுத்திடு வோம்; உல
கேசும் படிபல பேசுவோம்!-நறுங்
கன்னல் மொழித்தமிழ்த் தாயினமே, சாதிக்
காற்றில் கரைந்துயிர் சாய்வதோ ?

தென்மொழி சுவடி-1 ஓலை-8,9 (1974)

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/47&oldid=1164362" இலிருந்து மீள்விக்கப்பட்டது