16
சு. சமுத்திரம்
16 சு. சமுத்திரம்
கோலவடிவும், துளசிங்கமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். துளசிங்கம், லேசாய் வளைந்த தன் மூக்கு நுனியை ஆள் காட்டி விரலால் அடித்தபடியே, கோலவடிவையும், சந்திராவையும் பொதுப்படையாய்ப் பார்த்தபடியே பேசினான்.
"நான் பேச ஆரம்பிச்சால். ஒங்க காது தாங்காது. கம்மலு அறுந்து என் கையில விழும். அப்படிச் சிரிப்பிங்க."
"ஒமக்கு மங்கலமா பேச வராதோ. ஆயிரந்தான் இருந்தாலும் நீங்க அதிக நாளாய் டவுனுல இருந்த வருல்லா. கிராமத்து நாகரிகம் வராதுதான்."
"என் மவன அப்பிடிப் பேசாத. சந்திரா. நம்ம ஊர்ல. மூட்டை தூக்கி வண்டியடிச்சு. கடைசியல வக்குல்லாம மெட்ராசுக்கு போன பய மவனுவல்லாம் அங்க எச்சிப் பாத்திரத்தை கழுவுனாலும், ஊருக்கு வந்து கண்ணுல கறுப்புக் கண்ணாடியை போட்டுக்கிட்டு வாயில சிகரெட்ட ஊதிக்கிட்டு ஒரு நாளுலயே நேரம் போவமாட்டக்குன்ன துள்ளறதப் பார்க்கும்போது. எங்க துளசிங்கம் ஊருக்கு வந்த ரெண்டு வருஷத்துல ஒரு நாள் ஒரு பொழுதுகூட ஊர விட்டுப் போகணுமுன்னு நினைக்கல. பிள்ள. ஏண்டா துளசிங்கம். ஒன்னத் தாய்யா. ஒன் உரக்கடை எப்படிடா இருக்கு.?”
துளசிங்கம் கையில் இருந்த கம்பைத் தன் மார்போடு மார்பாய்ச் சாத்திவிட்டுச் சிறிது எரிச்சலோடு பதிலளித்தான்.
"என்ன சித்தி நேத்துத்தான் உரக்கடையைப் பத்தி ராமாயணம் மாதிரி கேட்டே. நானும் மகாபாரதம் மாதிரி பதில் சொன்னேன். இப்பவும் கேட்டா எப்படி.."
"ஒரு நாளைக்குள்ள உரக்கடை உசந்திருக்கலாமில்லியா. ஏதோ தெரியாமக் கேட்டுட்டேன். தப்புத் தாம்பா. நான்னா. எல்லோருக்கும் இளக்காரந்தான்."
"இப்படித்தான் எங்க சித்திக்கு மூக்குக்கு மேல கோபம் வந்துடும். சித்தி இன்னொரு நல்ல செய்தி. சிமெண்டுக்கும் ஏஜென்சி கிடச்சுட்டு. உரக்கடை பக்கத்துலயே தனிக்கடை போடப் போறேன். இதைச் சொல்லத்தான். இப்போ வந்தேன்."