சாமியாடிகள்
261
31
அந்த முருகன் கோவில் முகப்பில் எல்லாப் பெண்களும் கொட்டாவி விட்டபடியே பீடி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். மத்தியான வெயில். மண்டைக்குள் ஊடுறுவியது. ரஞ்சிதம் எதையோ யோசித்தபடி, கைகளை மட்டும் யந்திர ரீதியில் இயக்கிக் கொண்டிருந்தாள். கோலவடிவு சமாச்சாரத்தைப் பழனிச்சாமியிடமே சொல்லியிருந்தால், இந்த நிலமை வந்திருக்காதே என்ற மனத்தாங்கல் அவளுக்கு. ஒருத்தர் வீணாகப் போகும் அபாயம் ஏற்படும்போது, அதனைத் தடுப்பதற்கு கெளரவப் பிரச்சினையோ, இழிவுபடுவோம் என்ற எண்ணமோ, இடையில் வரப்படாது என்று நினைப்பவள். இப்படிப்பட்ட கெளரவப் பிரச்சினைகள் பலருடைய கெளரவங்களை சந்திக்குக் கொண்டு வந்து வாழ்க்கையே பாழாக இருப்பதைக் கண்கூடாகப் பார்த்தவள். இப்போது இனிமேல் என்ன செய்யலாம் என்பதுபோல் பீடி இலை ஒன்றைக் குறி வைத்துக் கத்தரியை நீட்டி அந்த இலையை வெட்டாமலே வெறித்துப் பார்த்தாள்.
இந்தச் சமயத்தில் வாடாப்பூ தலைவிரி கோலமாக ஓடி வந்தாள். ரஞ்சிதத்தின் முன்னால் மூச்சிறைக்க நின்றபடியே கோவிலை அங்குமிங்குமாய் பார்த்தபடியே கேட்டாள். இவள் இரவு தூங்கவில்லை என்பதைக் கண்கள் காட்டின.
"ரஞ்சிதம். எங்க பேச்சியம்மா சித்தி இங்க வந்தாளா?”
"வரல்லியே. என்ன விஷயம்."
"ஒனக்கு விஷயமே தெரியாதா?”
"கோலவடிவு விஷயமாத்தானே. ரெண்டுபேருமே பெரிய தப்பு பண்ணிட்டோம்."
"நாம நினைச்சுப் பாக்காத அளவுக்கு ஊர்ல என்னெல்லாமோ நடக்குது. ரஞ்சிதம்."