94
சு. சமுத்திரம்
"பீடி ஏசெண்டு கிட்ட இங்க நடந்ததை ஒடிப்போயி சொல்லப் போறாள்."
"சரி. ஏசெண்டு நாம சொல்லுறத அவள் மூலம் தெரிஞ்சுக் கிட்டா நமக்கும் பேச்சு மிச்சம்தானே. ஆனாலும் எங்க குடும்பத்துக்கு வந்த அலங்காரி பெரியம்மய இனிமே அப்டிப் பேசப்படாது."
சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தப் பெண்கள் அணிவகுக்காத குறையாக, பிடிக் கடைக்குப் போனார்கள். மேல, கீழ ஊருகளுக்கு மத்தியில் இருக்கும் கடை. அரங்கு அரங்கான அறைகள். வராண்டாவைத் தாண்டிய முதல் அறையில், இன்னொரு மார்க் பீடியை பிடித்தும், குடித்தும் அமர்க்களமாய் இருந்த ஏஜெண்ட் அதட்டினான்.
"என்ன இப்படி வரிசையா வந்து நிற்கிய. ஏதோ சொல்லப் போறிய போலுக்கு. என்ன விஷயம் ரஞ்சிதம்."
"நீங்களே கேட்டதால எனக்கு சந்தோஷம். இனிமேல் போடு வண்டலு கேட்கப்படாது. கலியையும் கட்டணும். பீடிய கழிக்கதோ. பழுப்பு இலய கொடுக்கதோ கூடாது.”
"ஒன் சாதி புத்திய காட்டிட்ட பாத்தியா." "நீங்கதான் காட்டுதீங்க." "என்னடி சொன்ன முடிச்சிமாறி. ஒங்களத்தான். பிள்ளியளா. நான் நம்மோட சாதிப்புத்திய காட்டுறதா இந்த கண்டார முண்ட சொல்லுதாள். நீங்க சாதி பொண்ணுவளா. இல்ல சாதி கெட்ட பொண்ணுவளான்னு தெரியணும். சாதிக்காரியாய் இருந்தால் கடைக்குள்ள வாங்க. பலசாதின்னா அவளோடயே நில்லுங்க."
ரஞ்சிதம், பயமின்றி சொன்னவனை நேருக்கு நேராய்ப் பார்த்தாள். பிறகு அந்தப் பெண்களையே பார்த்தாள் - அவர்கள் எடுக்கும் முடிவில்தான் தனது எதிர்காலமே அடங்கி இருப்பது போல.