பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்காலமேகங்கள்

167

"இதுவரை வந்து போய்க் கொண்டிருந்ததே உங்களுக்காகத் தானே ஒழிய முத்தக்காளுக்காக இல்லை.”

“இனியும் அதில் மாறுதல் எதுவும் இருக்கக் கூடாது. என்னைப் பொறுத்தவரை இந்த ‘மெஸ்ஸை'த் தொடர்ந்து நடத்திக் காட்டுவதை வாழ்க்கையின் சவாலாக ஏற்றிருக்கிறேன். சமூக விரோத சக்திகள் ‘இதை இனிமேல் நடத்தவே முடியாது’ என்கிற அளவு பயமுறுத்தினதை நாம் ஒரு போதும் மறந்து விட முடியாது!”

“முத்தக்காளுக்காக நீங்கள் எவ்வளவோ தியாகம் செய்திருக்கிறீர்கள்! இதில் செலவிடும் நேரத்திற்குப் பதில் ஒரு கராத்தே பள்ளிக்கூடம் வைத்து நடத்தினால் கூட ஆயிரம் ஆயிரமாக நீங்கள் சம்பாதிக்கலாம்.”

“அவசர அவசரமாகப் பணம் சம்பாதிப்பது ஒன்று மட்டுமே வாழ்க்கையின் இலட்சியம் என்று நான் நினைக்கவில்லை, வாழ்வதற்குத்தான் பணம் வேண்டுமே ஒழியப் பணம் வேண்டும் மென்பதற்காகவே வாழ்ந்து விட முடியாது.”

“முத்தக்காளும், மற்றவர்களும் பணத்துக்காகத்தான் வாழ்க்கை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.”

ஆமாம் என்றே இல்லை என்றோ பூமி இதற்குப் பதில் கூற வில்லை. அவளோடு மேலும் சிறிது தொலைவு உடன் நடந்து சென்று வழியனுப்பி விட்டுத் திரும்பினான். அவனுடைய பெருத்தன்மையும் நிதானமும் அவளை மேலும் கவர்ந்தன. அத்தனை வலிமை வாய்ந்த மனிதன் மிக மிகச் சிறிய காரணங்களுக்காகத் தன் வலிமையைச் சிதற விடாமல் இருக்கும் நிதானம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அறியாமைகளை உணர்ந்து புரிந்து பிறரை மன்னிக்கும் அளவு அறிவு உயர்ந்திருக்க வேண்டும் என்று பூமியே அடிக்கடி சொல்வதுண்டு. அதற்கும் அவனே உதாரணமாயிருந்தான். அவனே அதைக் கடைப் பிடித்தான்.

இந்த மனஸ்தாபத்தற்குப் பின் சித்ரா இரண்டு மூன்று நாள் மெஸ் பக்கம் போகவே இல்லை அவளுடன் பணி புரியும்