பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/268

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



45

பொன்னிறமான அந்திநேரத்து மேகங்கள் வானில் மிகவும் அழகாயிருக்கலாம். ஆனால் மண்ணில் இறங்கி மழையாகப் பெய்து மக்களுக்குப் பயன் தரும் ஆற்றல் என்னவோ மின்னி இடித்துப் பொழியும் கார்மேகங்களுக்கே இருக்கிறது.


ந்தத் தீவில் அன்று அதிகாலையில் ஆச்சரியங்களே காத்திருந்தன! ஏறக்குறைய அரைக்கிணறு ஆழத்துக்குத் தோண்டியும் பயனில்லை. போலீஸாருக்கு முன் பூமிக்கு அவமானமாகப் போயிற்று. அவன் முந்திய இரவு தன் கண்ணால் கண்டதை விளக்கி ஹோட்டல் அடையாள எழுத்துக்களுடன் கூடிய இரத்தக்கறை படிந்த சட்டையைக் கூடப் போலிஸ் அதிகாரிகளிடம் காண்பித்தான்.

அங்கேயே பையனின் பிரேதத்தை இடம் மாற்றிப் புதைத்திருக்கலாம் என்றும் வேறு சில இடங்களையும் அகழ்ந்து பார்க்க வேண்டுமென்றும் சொல்லி மன்றாடிப் பார்த்தான். ஆனால் அவர்கள் அவன் கூறியதை நம்பவில்லை, பெருத்த ஏமாற்றத்தோடு திரும்பினர்.

அங்கே முதற் கோணல் முற்றும் கோணல் என்பது போல ஆரம்பத்தில் ஏற்பட்ட அவநம்பிக்கையே தொடர்ந்தது. முதல் நாளிரவு பூமியும் நண்பர்களும் போய்விட்டுத் திரும்பியபின் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு கடத்தல்காரர்கள் உஷாராகிவிட்டிருக்க வேண்டும் என்று புரிந்தது.

காளத்திநாதனைப் பற்றியே இப்போது பூமிக்குச் சந்தேகமாயிருந்தது. கடத்தல்காரர்களையும் சமூக விரோதிகளான மன்னாரு கும்பலையும், ஒழிக்க வேண்டும் என்பதில் மிகவும்