பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

சாமந்தி-சம்பங்கி-ஓணான் இலை


பார்வதி எதேச்சையாக தன் கிழிந்த ஜாக்கெட்டை நைந்த புடவையால் மூடிக் கொண்டாள்.

நிஜார் போடாத அல்லது போட விரும்பாத அந்தச் சின்னப்பையன், "நம்ம கிட்ட ராங் காட்னே கத்தியாலே கீச்சிப்புடுவேன்." என்று சொல்லிவிட்டு, பிறகு எல்லா மெட்ராஸ் ரவுடிகளையும்போல ஓடினான். சாலையின் பிளாட்பாரத்துக்குக் கீழே பள்ளமான ஓர் இடத்தில் செருப்புக்களை தைத்துக் கொண்டிருந்த சீனன் (அதாவது சீனிவாசன் என்ற பெயரின் சுருக்கம்) போதையில் ஆடிக் கொண்டிருந்த தாயம்மாவின் ஆம்புடையானைப் பார்த்தான். தாயம்மா கணவனை கடிந்து கொண்டிருந்தாள்...

"இனிமே காட்டி... இந்தப் பிள்ளையாரப்பன்தான் ஒன்னைக் கேட்கணும். நான் பூவிலே சம்பாதிக்கிறத, நீ தண்ணியிலே விடற."

'தண்ணிக்காரர்' பதிலடி கொடுத்தார்.

"இன்னாமே... படாப் பேஜார் பண்றே... ஒன்காக காலங்காத்தாலே மொந்தை மொந்தையா பூ வாங்கிக்கினு வரணும். நீ ஆருகிட்டேயாவது 'பைட்டு'க்குப் போனால் நான் உதைக்கப் போணும்... சும்மா ஒரு கிளாஸ்பூட்டா இன்னாமே... ஏய், வுன்னை..."

மனைவியைப் பார்த்து நோக்கி நடந்த பூக்காரரை, சின்னான், தரதரவென்று இழுத்துக் கொண்டுபோய், தூங்குமூஞ்சி மரத்துக்குக் கீழே கொண்டுபோய் புரள வைத்தான். தாயம்மாவிற்கு அருகே, பிளாட்பார சுவருக்கம் - ஒரு மரத்திற்கும் இடையே வைக்கப்பட்டிருந்த சதுரப்பெட்டியில் ஓணான் இலைகளை தவளை மாதிரி மடித்துக்கட்டி அதற்கு மேல் துலுக்கச் சாமந்தி, சம்பங்கி, செவ்வரளி முதலிய பூக்களை அடுக்கடுக்காக - அழகாக கட்டிக்கொண்டிருந்த ராமன் கீழே குனிந்து அதட்டினான்.

"உங்க பொழப்ப பாருங்களேமே... இது என்ன புச்சாவா குடிக்கறாரு..."