பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

81


காய்ப்பு ஏறிய கைகள். ஆசாமிக்கு நாற்பது வயது இருக்கலாம். எல்லோரையும் ஒட்டுமொத்தமாக அதட்டினார்:

"ஏண்டா... சோமாறிங்களா... டிராஃபிக் இடைஞ்சலாகல? டேய் சின்னான்... இங்கே ஏண்டா வண்டியை நிறுத்தற... ஒரம் கட்டுடா கயிதே!"

சின்னானும், அவன் மனைவியும் எதுவும் பேசாமல், வாழைப்பழ வண்டியை முன்னால் நான்கு அடி நகர்த்தி, பிறகு பின்னாலும் நான்கு அடி நகர்த்தி, அதை இருந்த இடத்திலே நிறுத்திக் கொண்டிருந்தபோது

போலீஸ்காரர் சீனனை அதட்டினார்.

"என்னடா சீனா, குரோம்பேட்டை பாக்டரியிலிருந்து திருட்டுத்தனமா தோல் வாங்கிறியாம்... மாமியார் வீடு கேட்குதா..."

"அப்படில்லாம் ஒண்ணம் கிடையாது சாமி... வாணும்னா வந்து பாரு" என்று சொல்லியபடியே, சீனன் அத்தனை செருப்புக்களையும் எடுத்து, அவர் முகத்துக்கு எதிரே ஆட்டினான். போலீஸ்காரர் திருப்தி அடைந்தவராய் பிளாட்பார சுவரில் கை வைத்தபடியே, சைக்கிளை தள்ளியபடியே, காந்தா பக்கம் போனார். பிறகு அவள் மேஜை மேலே ஒரு கையை ஊன்றிக் கொண்டு அவளைப் பார்த்தார்.

காந்தா பேசவில்லை. சிரிக்கக்கூட இல்லை. ஒரு வெள்ளை ரோஜாவை எடுத்து அவர் காக்கிச் சட்டையில் வைத்தாள். அதற்குப் பிறகுதான் இருவரும் சிரித்தார்கள். என்னவெல்லாமோ 'கிசுகிசு' பேச்சுக்கள். அவள் யாரைப் பற்றியோ பேசியிருக்க வேண்டும். இல்லையென்றால், போலீஸ்காரர், அவள் பேசப்பேச அப்படி திரும்பிப் பார்த்திருக்க மாட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, காந்தா அவசர அவசரமாக கடையை எடுத்து வைத்தாள். "கடையை கொஞ்சநேரம் பார்த்துக்கணும்" என்று எல்லோருக்கும் ஒட்டுமொத்தமாக உத்தரவு போடுவதுபோல் பேசிவிட்டு, போலீஸ்காரரின் சைக்கிளில் பின்னால் ஏறிக் கொண்டாள்.

அந்த சில்லறைக் கடைக்காரர்களின் தலைகள்போல், சைக்கிள் சக்கரங்களும் சுழன்றன. கீரைக்காரி மாரியம்மாள் கொதித்தாள்: