பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

வெள்ளித் திரையும், வீதித் திரையும்



'நான் போய் பேசிப்பார்க்கட்டுமா?'

பேசிப் பாருப்பா... காளியம்மா! காளியம்மா! கைக்கு எட்டினத வாய்க்கு எட்டாமச் செய்திடாதடி பாவி'

அக்னிநாத், உள்ளறைக்குள் கிட்டத்தட்ட ஓடிப்போனான். திரைப்படங்களில், இப்படிப்பட்ட காட்சிகளில் கெக்கொலி கொட்டிச் சிரித்தவன். நிச வாழ்க்கையிலும் இப்படி காதல் சவாலிட்ட பல பெண்களை படுக்கையறையில் வீழ்த்தியவன். ஆனால் இப்போதோ படுத்துப் போனவனாய் நடந்தான்.

முக்காலியில் உட்கார்ந்தபடியே, வட்டக் கண்ணாடியில் முகம் பார்த்து, தலை வாரி முடித்த கயல்விழி, அவனைப் பார்த்து 'வாங்கத்தான்' என்று சொல்லியபடியே எழுந்து கொடியில் தொங்கிய கருநீல துப்பட்டாவை, நீலநிற சுடிதாருக்குமேல் போட்டுக் கொண்டாள். நிறமற்ற நிறம்... அதேசமயம் அழுத்தந் திருத்தமான முகம்... ஒளியச்சு லாவகம்... அவனை வரவேற்பதுபோல் சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவனை உற்சாகப் படுத்தியது. முதல் பார்வையிலேயே அவளை அசத்தியாச்சு. பேச்சிலயும் அசத்திட்டால் தோப்புக்கரணம் போடுவாள்.

'எப்பா... எப்படி வளந்துட்டே... எப்படி ஜொலிக்கிறே... உன்ன அப்படியேக் கடிச்சுத் தின்னுடலாம் போல இருக்கு...

'நீங்க என்ன மிருகமா?...

அக்னிநாத் திக்குமுக்காடினான்... அவளை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் அல்லாடினான். பல திரைப்படங்களில் வசனகர்த்தாக்கள் இவனுக்கு எழுதிக்கொடுத்த சவுக்கடி உரையாடல்களை முதல் தடவையாக வாங்கிக் கட்டுவதுபோல் நெளிந்தான். கண்களை மூடினான். மீண்டும் அவள் சிரிப்புச் சத்தம் கேட்டு கண்திறந்தான். அவள் பார்வை உற்சாகப் படுத்தியது.

'ஆமா! நான் மாறியிருக்கனா?... என்னைப் பத்து வருஷமாப் பார்க்காமலேயே அடையாளம் கண்டுபிடித்தியா... இல்ல நான்தான்னு யூகிச்சியா..?'