பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிக்கமுக்கிக் கற்கள்

காடுகொன்று நாடாக்காமல், நாடுகொன்று, காடான மலைக்காடு........

பார்வதி, படுக்கையாய் பயன்பட்ட கோணிப்பையின் இருமுனைகளையும், வீட்டுக்கூரையின் அடிவாரமான மூங்கில் கழியில் சொருகினாள். புறத்தே கதவாகவும், அகத்தே படுக்கையாகவும் ஆகிப்போன அந்தக் கோணி, இந்த இரண்டிற்கும் தாராளமாகவே இருந்தது. மூங்கில் நிலைவாசலில் தொங்கி, இந்தக் கோணிக்கதவு, தரையில் மடிந்தும் படிந்தும் தவழும் வகையிலான பொந்து வாசல்: அதுவே படுக்கையாகும்போதும் அப்படித்தான். முன்தலையையும் முட்டிக்கால்களையும் முட்ட வைத்தால் மட்டுமே படுக்கக்கூடிய தலை. ஆகையால், கோணிக்குச் சிக்கல் இல்லை. அவனும் இவளும் சேர்ந்து படுக்கும்போதுதான் இடச்கிக்கல். ஒருவரையொருவர் கிட்டத்தட்ட படுக்கையாக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பெரும்பாலும் அசல் படுக்கைகளாகத்தான் கிடப்பார்கள்.

"யாரும்மா உள்ளே இருக்கறது?"

பார்வதி, ஆவலோடு வெளியே வந்தாள். பொந்து வாசலில் இருந்து மனிதப் பெருச்சாளியாய் தவழ்ந்து வந்தாள். அது ஜாமீனில் வந்திருக்கும் என்ற அனுமானத்துடன் வெளிப்பட்டாள். அந்த அனுமான வேகத்தில் பெண்குரல் கூட ஆண்குரலாக - அதுவும் அவனுடைய குரலாகவே கேட்டது. உதட்டைக் கடித்தபடியே, எதிர் நின்றவளையும் அவளது இடுப்பையும் கையையும் பற்றி நின்ற சின்னஞ்சிறுசுகளையும் பார்த்தாள். இந்தச் சிறுசுகளை வரிசையாக நிறுத்தினால் இவர்களின் தலைகள் படிக்கட்டுகள்போல் தோன்றும். இப்படிப்போன்றவற்றை ரசித்துப் பார்க்கும் பார்வதிக்கு இப்போது அவளும் அந்தக் குழந்தைகளும் வெறும் பிம்பங்களாக மட்டுமே