பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

பால் பயணம்


என்று விளம்பரம் செய்தது. பள்ளிக்குச் சென்ற தன் படிப்பை நிறுத்தும்படி வாதிட்டது. அதையும் மீறி, படித்தது. அப்புறம் வேலையில் சேர்ந்தது. அப்பா ஒரு பெரிய இடத்துக்குத் தன்னைக் கொடுத்துவிட்டுப் பத்தாயிரம் ரூபாய் பணத்திை வாங்கிக் கொண்டது, எல்லா அரசு ஊழியர்களையும்போல் தன் கணவனும் சம்பளமும், கிம்பளமுமாய்த் தன்னை வாழ வைப்பார் என்று நம்பிய பெரிய இடத்து மனைவி, நாளடைவில் தன்னை நாலுபேர் முன்னால் அடிக்கடி நாறடித்தது. அலுவலகப் பணி மாற்றத்திற்கு உள்ளாகி, மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் சென்னையில் வைத்துவிட்டு, தான் மட்டும் டில்லி, கல்கத்தா, பம்பாய் என்று சுற்றிவிட்டு, இப்போது இந்தத் திருச்சியில் பணியாற்றுவது, அம்மாவின் போதனையாலோ என்னவோ பெற்ற மகளும், மகனும் பாராமுகமாய் இருப்பது-ஆகிய கடந்தகால வெறுப்பு நிகழ்ச்சிகளும், அதற்காக அவர் மேற்கொண்ட விருப்பு நிகழ்ச்சிகளும் அவர் மனதிலே காட்சிகளாகவும், கண்ணிலே நீராகவும் உருவெடுத்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தச் பாலியல் சிந்தனை - அதனை மட்டுமே பற்றி நிற்கும் மனம், அதில் மட்டுமே ஈடுபடும் குணம்... இழி குணம்...

சம்பந்தம், திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுதார். முகத்தைக் கரங்களால் மூடியபடியே காலாட, கையாட குழந்தைபோலக் கத்தினார். வாலிபன்போல் தேம்பினார். தோளில் ஆதரவாய் விழுந்த டாக்டரின் கைகளை எடுத்துத் தன் முகத்தில் வைத்தபடியே விம்மினார். டாக்டரும், அவரை அழும்வரை அழவிட்டார். பிறகு, அவர் முகத்தை நிமிர்த்தி, தலையைக் கோதிவிட்டபடியே அறிவுறுத்தினார்.

"டாக்டர்கிட்டே உடம்பை நிர்வாணப்படுத்திக் காட்டுறது எப்படித் தப்பில்லையோ, அப்படி மனோதத்துவ டாக்டரிடம் உள்ளத்தை நிர்வாணப்படுத்திக் காட்டுறதுல தப்பில்ல ஸார். ஒங்க மனசுல உலகமே ஒங்களுக்கு எதிராய் இருக்குது மாதிரி எண்ணம் வருதா? முதலமைச்சராயும் பேட்டை ரெளடியாகவும் உங்களை நீங்களே கற்பனை செய்து பார்க்கிறீர்களா..? அல்லது எப்போ பார்த்தாலும் பெண் சிந்தனையே பெரிதாய் வருதா. சொல்லுங்க ஸார்..."