பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

69


மானேஜர் இளைஞன், அவனை ஏற இறங்கப் பார்த்தான். ஆபீஸிற்குள், தான் நுழைவதைப் பார்த்த பிறகும் 'ஆபீஸிற்கு வாரீங்களான்னு' கேட்டால் என்ன அர்த்தம்? இவன், திமிரை அடக்காமல் விட்டால், பிஸினஸ் அட்மினிஷ்ட்ரேஷன் கோர்ஸ் படித்ததில் அர்த்தமே இல்லை.

சிங்காரத்திற்கு பதில் வணக்கம் செலுத்தாமல் 'யூ மீட் மி இன் மை ரூம்' என்று கோபமாகச் சொல்லிவிட்டு, வேகமாக லிப்டிற்குள் நுழைந்தான்.

அக்கெளண்டண்ட் சிங்காரத்தின், ரத்தம் கொதித்தது. மரியாதை கொடுத்தால், இந்த மேனேஜருக்கு மரியாதை தெரியவில்லையே! இருக்கட்டும்... இருக்கட்டும்... இரண்டில் ஒன்றை பார்த்துவிடலாம்.

மானேஜர் சொன்னபடி அவன் பார்க்கவில்லை. பியூன் வந்து சொன்னபிறகு, கால்மணி நேரம் கழித்து, மானேஜர் அறைக்குப் போனான். அப்போது, மானேஜர், அவனைக் கூப்பிட்டதை மறந்தவன்போல், ஒரு இளம் பெண்ணுடன் மெய்மறந்து பேசிக் கொண்டிருந்தான்.

"சரண் சிங், நேருவின் பொருளாதாரக் கொள்கையை தாக்கியிருந்தார் பார்த்திங்களா? உங்க அபிப்ராயம் என்ன மேடம்?"

அந்தப் பெண் அழகானவள் மானேஜரிடம் ஏதோ பேசப் போனாள். அதற்குள் அங்கே நின்று கொண்டிருந்த, அக்கெளண்டண்ட் சிங்காரம் ஒரு நாற்காலியில் இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டே “நம் நாட்டுக்கு ஹெவி இண்டஸ்ரிஸும் முக்கியம்தான். அதேமாதிரி காட்டேஜ் இண்டஸ்ரிஸும்..." என்று பேசிக் கொண்டே போனான்.

அந்த இளம்பெண், மானேஜரை விட்டு விட்டு சிங்காரத்தைப் பார்த்தாள். எதிரே உள்ள நாற்காலியில், கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டு, அக்கெளண்டண்ட் சிங்காரம் பேசியதை மானேஜர் சதாசிவத்தால் சகிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு அந்தப் பெண் அவனையே பார்க்கிறாள். இப்போது அவர், அவளை 'இம்ப்ரஸ்' செய்தாக வேண்டும்.