பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

73


"டிராமாவுக்கு கதை வசனம் யார் எழுதறது".

"நம்ம அக்கெளண்டண்ட் சிங்காரம் ஸார். நீங்க தலைமை தாங்கணும்".

"நான் தலைமை தாங்கணுமுன்னா முதல்ல ஸ்கிரிப்டை பார்க்கணும். கம்பெனிய தாக்குறது மாதிரி இருக்கா? தனிப்பட்ட மனிதரை தாக்குறது மாதிரி இருக்கான்னு பார்க்கணும்."

ஊழியர்கள், சிங்காரத்திடம் விவரத்தைச் சொன்னார்கள். அவன் முதலில் குதித்தான். பிறகு, தன் திறமையை, சேல்ஸ் மானேஜருக்கு தெரியப்படுத்த விரும்பியவன்போல், ஸ்கிரிப்டை கொடுத்தான்.

சிங்காரத்தின் 'ஸ்கிரிப்டை' சதாசிவம் படித்தான். அவருக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. இதுவரை, தன்னால் மட்டுமே நன்றாக எழுத முடியும் என்று நினைத்த அவனுக்கு, அந்த ஸ்கிரிப்ட் நன்றாக இருப்பதுபோல் தோன்றியது. ஆகையால், அந்த கதை வசனத்தை அடியோடு வெறுத்தான். அதை எழுதிய சிங்காரத்தை இன்னும் அதிகமாக வெறுத்தான். ஸ்கிரிப்டில் இருந்த நுணுக்கங்களும், ஜனரஞ்சக நடையும், அவன் உள்ளத்தைக் குடைந்தன.

'ஸ்கிரிப்ட் எப்படி ஸார் இருக்கு" என்று கேட்டுக் கொண்டே ஊழியர்கள் வந்தார்கள்.

"இதுக்கு பேரு ஸ்கிரிப்டாயா? கதை இல்ல... வசனம், மட்டத்திலும் மகா மட்டம். சம்பவக்கோர்வை என்கிற பேர்ல சம்போக கோர்வை... சீச்சி... இதைவிட நீங்க நாடகம் போடாமலே இருக்கலாம். வேற ஸ்கிரிப்ட்டை வேற ஆள்கிட்ட வாங்குங்க"

"டூ லேட் ஸார். ஆள் கிடைக்கிறது கஷ்டம். இவன் பணம் வாங்காம எழுதிக் கொடுத்தான். மத்தவங்க பணம் கேட்பாங்க."

"நான் பணமும் தாரேன், ஸ்கிரிப்டும் எழுதித்தாரேன். ஏன் யோசிக்கிறீங்க? என் கதைகள நீங்க படிச்சதில்லையா?"