பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

வாழ முடியவில்லை என்றால், இங்கே உள்ளவர்கள் நான் செத்துத் தொலைந்து விட்டதாக எண்ணிக் கொள்ளும்படி செய்துவிட்டு, எங்காவது தூரந் தொலையில் சென்று சிறு குழந்தைகளுக்கு எழுத்துகள் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராகவாவது இருக்க வேண்டியதுதான், அந்த விஷயத்தில் நான் அவர்களுக்கு முற்றிலும் ஒரு பாரமாக இருக்கிறேன். நான் செலவாளியாக இருக்கிறேன். செலவழிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை.

இந்த விஷயங்களையெல்லாம், நீங்கள் எனக்காக ஏதேனும் கஷ்டப்பட வேண்டும் என்பதற்காகவோ, அல்லது கவலையெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலோ நான் சொல்லவில்லை. ஆனால், என் இதயத்திலிருந்து துன்பபாரத்தை அகற்றுவதற்காகவே சொல்லுகிறேன், இன்னொரு முறை நான் உங்களிடம் இதைச் சொல்ல மாட்டேன்.

சிந்தைக்கினிய நண்பரே, காதல் மக்களின் இதயத்திலே பொருந்தும்போது, அதைக் கட்டி வைக்கவோ அதன் இறக்கைகளைச் சேர்த்து இறுக்கி வைக்கவோ முயலுபவர்களைத் தான் அது மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது என்பதை நான் தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். சிறு குழந்தையாகவும் அடிக்கொரு நினைப்புமாக உள்ள அந்தக் காதல், அவர்கள் கண்களையும் இருதயங்களையும் அவர்களுடைய குடலையும் கூடப் பிடுங்கியெடுத்து விடுகிறது. ஆனால், அதை விரும்பி அதன் போக்குக்கேற்ப வளரவிட்டு விடுகிறவர்களும் இருக்கிறார்கள். அது தங்கள் இதயத்தை விட்டுப் போகும்போது அவர்கள் அதைப் போகவிட்டு விடுகிறார்கள். அது திரும்பி வரும்பொழுது அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் விரும்பி வரவேற்றுக் கொள்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் எப்பொழுதும் அதன் அருளுக்குப் பாத்திரர்கனாகி அதன் ஆட்சியின் கீழ் வெற்றியுடன் திகழ்கிறார்கள். ஆகவே அன்புக்குரியவரே, இயற்கையாகவே நிலையற்ற ஒன்றை நிலைப்படுத்த முயலாதீர்கள். நீங்கள் விட்டு வைக்கக் கூடிய ஒவ்வோர் இறக்கைக்கும் ஓராயிரம் வீதம் கொடுத்து உங்களை உயர உயரப் பறக்க வைக்கக் கூடிய ஆற்றல் படைத்த அந்த இறக்கைகளை இறுக்கிப் பிணைத்து வைக்கவும் முயலாதீர்கள். நீங்கள் நலமாக இருப்பீர்களாக!

நிக்கோலோ மாக்கியவெல்லி.