18
எத்தனையோ திறனறிவாளர்களின் பிள்ளைகளின் கதி இப்படித்தான் முடிந்திருக்கிறது. இதற்கு மாக்கியவெல்லியின் மகன் விதிவிலக்கல்ல!
இத்தாலி தேசத்தின் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய குறிப்புக்களை காலக்கிரமமாக வரிசைப்படுத்தி இந்நூலில் மாக்கியவெல்லி எழுதியிருக்கிறான்.
டீட்டஸ் லீவியசின் முதல் பத்துப் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி . (1512-1522) மாக்கியவெல்லி எழுதிய மிகப் பெரிய நூல் இதுதான். 1512-ஆம் ஆண்டில் இந்நூலை எழுத ஆரம்பித்து 1522-ஆம் ஆண்டில் முடித்தான். ஆம், பத்து ஆண்டுகளில் பத்துப் புத்தகங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறான்.
இவன் ஆராய்ச்சிக்குக் காரணமாயிருந்த நூல் ஒரு சரித்திர நூல். இந்தச் சரித்திர நூலை எழுதியவன் லீவி என்ற ஆசிரியன். இந்த லீவி ரோமானிய சரித்திரத்திலே மிகப் புகழ் பெற்று விளங்குகிறான். படுவா நகரில் கி.மு. 59-ஆம் ஆண்டில் பிறந்து கி.பி. 17ஆம் ஆண்டில் இயற்கையடைந்த லீவி, அதற்கு முந்திய காலத்து ரோமானிய சரித்திரத்தை நூற்றி நாற்பத்திரண்டு புத்தகங்களாகத் தொகுத்து எழுதியிருக்கிறான். இந்தப் புத்தகங்களில் ரோமானியரின் கீர்த்தியையும் அற முறையையும் விளக்கக்கூடிய தேசீய சரித்திரம் அடங்கியிருக்கிறது. பழங்காலத்திலிருந்து டீட்டஸ் லீவியசின் இந்தச் சரித்திர நூல் ரோமானிய கலாச்சாரத்தின் பாதுகாப்புப் பத்திரமாகவும், வரலாற்று நூல்களுக்கு வழி காட்டும் முதல் புத்தகமாகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
லீவி எழுதிய நூற்றி நாற்பத்தி இரண்டு புத்தகங்களில் முதல் பத்துப் புத்தகங்களைப் பற்றி மட்டுமே மாக்கியவெல்லி