51
இருப்பதால், எப்பொழுதும் அவர்கள் உள்ளத்தை விட்டுப் போகாமல் நிலைத்து நிற்கும்.
தான் மக்கள் அன்பைப் பெறாவிட்டாலும் அவர்கள் வெறுப்பதைத் தவிர்க்கக் கூடிய வகையிலே ஓர் அரசன் தனக்கு அவர்கள் அஞ்சும்படி செய்துகொள்ள வேண்டும். அரசன் ஒருவனுடைய உயிரை எடுத்துவிட வேண்டுமென்று எண்ணினால், அதற்குத் தகுந்த காரணமும் நியாயமும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இருக்குமானால் அவன் உடனே குறிப்பிட்ட அந்த மனிதனுடைய உயிரைப் பறித்துவிடலாம். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் பிறருடைய சொத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளவோ பறித்துக்கொள்ளவோ கூடாது. ஏனெனில் தங்கள் தந்தை. இறந்ததை எளிதாக மறந்துவிடுவது மக்கள் இயல்பு, ஆனால் தங்கள் பிதிரார்ஜித சொத்தை இழப்பதை மட்டும் அவர்கள் மறக்கவும் மாட்டார்கள்; பொறுக்கவும் மாட்டார்கள்!
தன் ஆதிக்கத்தில் ஏராளமான போர்வீரர்கள் அடங்கிய படையை வைத்து நடத்துகின்ற ஓர் அரசன் தான் கொடியவனாக எண்ணப்படுவதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இருக்க வேண்டியது பெரிதும் அவசியமாகும். இந்தப் பெயரெடுக்காத அரசன் ஒரு படையை ஒற்றுமையாகவோ அல்லது எந்தக் கடமையையும் சரிவரச் செய்யக் கூடியதாகவோ வைத்திருப்பது முடியாத காரியம்.
மனிதர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் அரசனை நேசிக்கிறார்கள். ஆனால் அரசனுடைய விருப்பத்தின் பேரில் அவனுக்கு அஞ்சுகிறார்கள். புத்திசாலியான ஓர் அரசன் தன் வசம் இருக்கக் கூடிய ஒன்றைத்தான் நம்பியிருக்க வேண்டுமேயொழிய, பிறர் வசம் இருக்கக் கூடிய ஒன்றை நம்பியிருக்கக் கூடாது. ஆகவே அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும் அச்சப்படச் செய்வது விரும்பத்தக்கது.
அரசன் எப்படி உண்மையைக் காப்பாற்ற வேண்டும்?
(போரிடுவதில் இரண்டு முறைகள் உண்டு. ஒன்று அற வழியில் நின்று போரிடுவது. மற்றொன்று பலத்தைக் கொண்டு மட்டுமே போரிடுவது. முதல் வழி