பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

மக்கள் ஒழுங்காக வாழ்க்கை நடத்தும் காலத்தில் எந்தவிதமான சதியைப் பற்றியும் அரசன் கவலைப்பட வேண்டியதேயில்லை. ஆனால் மக்கள் அரசனை எதிரியாக நினைத்து வெறுக்கும்படியான நிலையிருக்குமானால், அவன் ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொருவருக்கும் பயந்து கொண்டேயிருக்க வேண்டும். நல்ல நிலையில் உள்ள ராஜ்யங்களும், புத்திசாலியான அரசர்களும் ஆறுதலற்ற நிலைக்குப் பிரபுக்களை அடித்தோட்டிவிடாமலும், மக்களை மன நிறைவோடு வைத்திருக்கவும் மிகவும் கவனமாக முயற்சி எடுத்துக் கொள்வதுண்டு. ஏனெனில் ஓர் அரசன் கண்காணிக்க வேண்டிய மிகவும் முக்கியமான விஷயங்களிலே இதுவும் ஒன்று.

கோட்டைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும்!

தங்கள் உடைமைகளைப் பத்திரமாய்க் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சில அரசர்கள் தங்கள் குடி படைகளை நிராயுத பாணிகளாக்கியிருக்கிறார்கள். சிலர் குடிமக்களின் நிலங்களை பல பகுதிகளாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். வேறு சிலர் மக்களுக்குள்ளேயே பகைமைகளை வளர்த்து விட்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் ஆட்சியின் தொடக்க காலத்தில் சந்தேகத்திற்குரியவர்களாயிருந்தவர்களைத் தங்கள் வசப்படுத்த முயன்றிருக்கிறார்கள். சிலர் கோட்டைகளை எழுப்பியிருக்கிறார்கள். வேறு சிலர் அவற்றையிடித்துத் தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். இந்த விஷயங்களைப் பற்றி ஆராயுமுன் அந்தந்த அரசின் நிலைமைகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டால் தான் சரியான முடிவு சொல்ல முடியும். இருந்தாலும் கூடுமானவரை பொதுப்படையாகப் பேசலாம்.

ஒரு புதிய அரசன் தன் குடி படைகளை நிராயுதபாணியாக்கியதே கிடையாது. அவன் அவர்களை ஆயுதபாணியாக்குவதன் மூலம் அவர்களைத் தன் வைரிகளாக்குகிறான். சந்தேகத்திற்குரியவர்கள் இந்தச் செயலினால் நம்பிக்கைக்குரியவர்களாக மாறுகிறார்கள். நம்பிக்கைக்குரியவர்களோ, அதே நிலையில் இருக்கிறார்கள். ஒருவன் தன் குடிமக்கள் எல்லோரையும் ஆயுதபாணிகளாக்க முடியாது. சிலரையே ஆயுதபாணிகளாக்க முடியும். இவ்வாறு செய்வதால் மற்றவர்களுடன் மிகவும் பாதுகாப்பாகத் தொடர்பு கொள்ளலாம்.