பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

ஓர் அரசன் தன் குடிமக்களை நிராயுத பாணிகளாக்கினால் அவர்களிடம் தன் உறுதியின்மையாலோ அல்லது கோழைத்தனத்தினாலோ அவர்களிடம் தன் நம்பிக்கையின்மையைக் காட்டிக் கொண்டவனாகிறான். இதனால் அவர்கள் வெறுப்புக்காளாகிறான்.

ஆயுதபாணிகள் இல்லாமல் ஓர் அரசன் ஒரு நாட்டை ஆள முடியாதாகையால், கூலிப் படைகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அவற்றின் தன்மையை நாம் முன்னே அறிவோம். அந்தக் கூலிப்படைகள் நல்லவையாக இருந்தால் கூட ஆற்றல் மிகுந்த பகைவர்களிடமிருந்தும் சந்தேகப்படக் கூடிய குடிகளிடமிருந்தும் அரசனைக் காப்பாற்ற முடியாது. ஆகவே, புதிய அரசிலுள்ள எந்தப் புதிய அரசனும் தன் குடிபடைகளை எப்பொழுதும் ஆயுதபாணிகளாக வைத்திருக்கவே செய்வான்.

ஆனால், ஏற்கனவே ஒரு பழைய ராஜ்யத்தையுடைய அரசன் ஒரு புதிய ராஜ்யத்தை ஆக்கிரமித்துக் கொண்டால், அந்த மக்களை நிராயுதபாணிகளாக்கிவிடுவான். அந்த மக்களின் ஆயுதங்கள் அனைத்தையும் தன் சொந்தப் படைகளின் உடைமையாக்கி விடுவது நல்லது.

சில அரசர்கள் எதிர்ப்பிலேயே உயர்ந்து ஓங்குகிறார்கள். அதற்காக அவர்கள், பகைவர்களை உண்டாக்கிக் கொண்டு போராடிப் பல வெற்றிகள் பெற்றுப் பெரும் கீர்த்தியடைவதுண்டு.

அரசர்கள், அதிலும் புதிதாக அரசரானவர்கள், ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த காலத்தில் தங்கள் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்தவர்களைக் காட்டிலும் சந்தேகத்திற்கு உரியவர்களாய் இருந்தவர்கள் மிக உண்மையும் பயனும் உடையவர்களாய் இருந்திருப்பதைக் கண்டிருக்கிறார்கள்.

சில குடிமக்கள் தங்கள் ராஜ்ய ஆட்சி பிடிக்காமல் இரகசியமாக வேறோர் அரசனைக் கூட்டிவந்து தங்கள் நாட்டரசனாய் ஆக்குவதுண்டு. இப்படி அரசரானவர்கள் நெடு நாள் நிலைத்திருக்கமாட்டார்கள். ஏனெனில், தங்கள் நிலைமையில் திருப்தி காணாதவர்களைத் திருப்திப்படுத்துவதென்பது இயலாத காரியம். தங்கள் நிலைமையில் திருப்தியடையக் கூடியவர்களை முதலில் பகைவர்களாய்ப் பெற்றாலும் கூடப் பிறகு நண்பர்களாக்கிக் கொள்வது எளிது.