பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

காலகாறிதல் :

தன் பண்பாட்டிலோ வேறு விதத்திலோ எவ்விதமான மாறுபாடும் அடையாத ஓர் அரசன் இன்று அதிர்ஷ்டத்துடன் சிறப்பாயிருக்கிறான். நாளை அழிந்து போகிறான். இதற்குக் காரணம் என்னவென்றால், அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடியவன் அதிர்ஷ்டம் மாறும்போது தானும் வீழ்ந்து விடுகிறான் என்பதே. அது போலவே காலத்திற்குத் தகுந்தபடி நடந்து கொள்கின்றவன் இன்பமாகவும் காலப் போக்கிற்கு மாறாக நடந்து கொள்கிறவன் துன்பப்பட்டுக் கொண்டும் இருக்கிறான் என்றே நான் எண்ணுகிறேன். செல்வமும் கீர்த்தியும் அடையும் விஷயத்தில் மனிதர்கள் வெவ்வேறு விதமான வழிகளைக் கையாளுகிறார்கள். ஒருவன் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடக்கிறான்: மற்றொருவன் மும்முரமான வேகத்தோடு நடந்து கொள்கிறான். ஒருவன் மூர்க்கமாக நடந்து கொள்கிறான்; மற்றொருவன் தந்திரமாக நடந்து கொள்கிறான். ஒருவன் பொறுமையைக் கையாளுகிறான்; ஒருவன் அதற்கு மாறுபாடான முறையைக் கையாளுகிறான். இப்படிப் பல்வேறுபட்ட வழிகளில் செல்பவரும் தத்தம் குறிக்கோள் நிறைவேறக் காணமுடியும். முன்னெச்சரிக்கையுள்ள இரண்டு மனிதர்களில் ஒருவன் தன் குறிக்கோளில் வெற்றியடைவதையும் மற்றொருவன் தோல்வியடைவதையும் காண்கிறோம். அதுபோலவே முன்னெச்சரிக்கையுள்ளவன் ஒருவனும், அவசரக்காரன் ஒருவனும் வெவ்வேறு காலத்தில் தங்கள் குறிக்கோளில் வெற்றியடைவதையும் காண்கிறோம். இப்படியெல்லாம், நிகழ்வதற்குக் காலமும் சூழ்நிலையும் காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். காலத்திற்குத் தகுந்தபடி தன் செயல்முறையை வகுத்துக் கொள்ளாதவன் தோல்வியடைகிறான். எவ்வளவு முன்னெச்சரிக்கையுடைய வனாயிருந்தாலும் தகுந்த காலம் வரும்போது சட்டென்று விரைந்து செய்து முடித்தால் ஒழிய வெற்றி பெற முடியாது. காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தபடி தன் திட்டங்களையும் செயல்முறைகளையும் வகுத்துக் கொள் கிறவனிடம் அதிர்ஷ்டம் என்றும் மாறாமல் நிலைத்து நிற்கும்.

(ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்

-திருக்குறள்)