பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

அந்நியரிடமிருந்து நம் நாட்டைப் பாதுகாக்க இப்படிப்பட்ட பராக்கிரமமுள்ள இத்தாலியப் படையை உண்டாக்க வேண்டியது இன்றியமையாதது. சுவிஸ் தேசத்துக் காலாட் படைகளும், ஸ்பானியக் காலாட்படைகளும் பயங்கரமானவை என்றாலும் அவ்வவ்வற்றிற்குரிய குறைபாடுகள் இல்லாமல் இல்லை.

ஸ்பானியர்களின் காலாட்படை குதிரைப் படைகளை எதிர்த்து நிற்க முடியாது. பிரெஞ்சுவின் தேசத்தாரின் படைகளோ, தமக்குச் சமமான பலமுள்ள படைகளை எதிர்த்து நிற்க முடியாது. பிரெஞ்சு குதிரைப் படைகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஸ்பானியப் படைகள் திணறியதையும் ஸ்பானியக் காலாட்படையால் ஸ்விஸ் படைகள் வீழ்த்தப்பட்டதையும் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். இன்னும் பல நிகழ்ச்சிகளையும் கண்டிருக்கிறோம். ஆகவே, குதிரைப் படைகளை எதிர்த்து நிற்கக் கூடியதும், காலாட்படைகளுக்குப் பயப்படாததுமான ஒரு புதிய படையமைப்பை உண்டாக்க வேண்டும். இப்படிப் புதிதாக உண்டாக்கப்படுகின்ற படை புதிய அரசனுக்குப் பெருமையையும் புகழையும் தேடித் தரும். கடைசியாக இத்தாலி தன்னை விடுவிக்கக் கூடிய ஒருவரைக் கண்டுபிடித்துவிட்ட இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டு விடக்கூடாது. அன்னியர் படையெடுப்பால் அவதிப்பட்ட மக்கள், பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் மக்கள், இப்படிப்பட்ட விடுதலை வீரனிடம் எவ்வளவு அன்பு பாராட்டுவார்கள். எவ்வளவு உண்மையாக இருப்பார்கள், எவ்வளவு நன்றிக் கண்ணீர் வடிப்பார்கள் என்று என்னால் விவரிக்க முடியாது. அவனுக்கெதிராக எந்தக் கதவு மூடியிருக்கும்? யார் அவனுக்குக் கீழ்ப்படிய மறுப்பார்கள்? எந்தப் பொறாமை அவனை எதிர்த்து நிற்க முடியும்? மிலேச்சர்களுடைய ஆதிக்கம் ஒவ்வொருவருடைய மூக்குத் துவாரத்தையும் கொத்திக்கொண்டிருக்கிறது. ஆகவே, ஒளி பொருந்திய தங்கள் ஆஸ்தானம் ஆண்மையோடும், நியாயத்திற்காகப் போராடுகிறோம் என்ற நம்பிக்கையோடும் இந்தக் காரியத்தை மேற்கொண்டு நமது வெற்றிக் கொடியின் கீழே நம் தந்தையர் நாடு தலை நிமிர்ந்து நிற்கச் செயலாற்ற முனைவீர்களாக!

“இத்தாலியர்களின் முன்னைப் பெருமை இறந்துவிடவில்லை. இன்னும் இதயத்தைத் தூண்டிக்கொண்டுதான் இருக்கிறது!” என்ற பெட்ரார்ச்சின் மொழி நிறைவேற்றப்படுமாக!

மாக் - 5