106 சிறந்த சொற்பொழிவுகள்
எம்.பி.பி.எஸ். டாக்டரையும் நமது அம்பஷ்ட வைத்தியரையும் அவர்களது அநுபவத்தைக் கொண்டு - அவர்களின் செயலாற்றுந் திறனைக் கொண்டு கணக்கிடும்படிச் செய்தவர் அவர்தான். “எப்படி ஒரு பெரிய ரோட்டு உருளையானது ரோடில் பரப்பப்பட்டுள்ள சிறுகல் பெருங்கல் அனைத்தையும் தன் பளுவால் சரிமட்டமாக்குகிறதோ, அப்படித் தம் அறிவுருளையால் அனைத்தையும் சமமாக்கித் தந்தார், நமது அறிவின் தந்தை பெரியார்.
முகத்து ரோமத்தை நீக்க உதவுவது கூரிய கத்தி; அதைக் கூர்மைபடுத்தித் தருவது சாணைக்கல்; அதேபோல் பகுத்தறிவுதான் நமது மடமையைப் போக்கும் கத்தி; அப்பகுத்தறிவுக்குச் சாணைக்கல் போல் உதவி செய்வதுதான் நமது கல்வி. ஆகவே, கல்வியைக் கல்லடா தம்பி! அது அறிவைக் கூர்மைப்படுத்தும் தம்பி! நெடுங்காலமாகவே நமது அறிவை உபயோகப்படுத்தாததால் அது மழுங்கிவிட்டது. ஆதலால் அதைக் கல்வியெனும் சாணைக்கல்லால் தீட்டுடா தம்பி! என்று கூறியவர் அவர்தான்.
படித்தவர் என்றால் ஒன்றும் பிரமாதம் இல்லை. படித்துவிட்டால் மட்டும் ஒருவன் அறிவாளியாகிவிடமாட்டான். அறிவாளிகளெல்லாம் படித்துத்தான் அறிவாளிகள் ஆனார்கள் என்று கூறுவதற்கும் இல்லை. அல்லது படித்திருப்பதனாலேயே ஒருவன் சகல காரியங்களிலும் நிபுணன் ஆகிவிட முடியாது. நன்றாகப் படித்துள்ள ஒரு நீதிபதி, ஒரு நல்ல நாற்காலி மேசையைச் செய்துவிட முடியாது. அது தச்சன் தொழில். ஆகவே, அவன்தான் அதைத் திறம்படச் செய்வான். அந்த நாற்காலி செய்ய முடியாததால் அந்த நீதிபதியை அறிவற்றவன் என்று நாம் கூறிவிட முடியுமா? அந்தத் தச்சனையே ஒரு உளியடித்துக் கொடு என்றால் அதைத் திறம்பட அவனால் செய்து தர முடியுமா? உளி செய்பவன் கருமான், அவனுக்குத்தான் உளி செய்யும் பக்குவம் தெரியும். ஆகவே, அவனவனுக்கு அந்தந்தத் தொழிலில் தேர்ச்சியுண்டு என்று கூறலாமே தவிர, ஒருவன் மற்றவனைவிட அறிவில் உயர்ந்தவன் என்றோ, தாழ்ந்தவன் என்றோ நம்மால் கூற முடியாது.
"செழுமையில் ஆசைப்படாதே! உன்னுடைய தேவையை அநாவசிய மாக அதிகரித்துக் கொள்ளாதே! மற்றவர்களின் ஆடம்பரத்தைக் கண்டு அவ்வாடம்பரத்தில் மோகம் கொள்ளதே! இன்று வெறும் ஆசைக்கென்று விருப்பப்படும் பொருளானது, நாளைக்கு அடைய முடியாமற் போனால் நமக்குத் துன்பத்தையே அளிக்கும்! ஆனதால் அவசியமில்லாத பொருளைத் தேவையென்று கருதிவிடாதே! எளிய வாழ்க்கை நடத்து: