பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடுத்த நாள் முதல், இது என் பக்கத்தில் வர முயலுவதில்லை" என்றாள். வெயிலில் உலரவைக்க வேண்டிய பண்டவகைகளைப் பாட்டி தயாரிக்கும்போது, ராகுலன் அவற்றுக்குக் காவல் நிற்கும்; ஒரு காகம் கூட அருகில் வராதபடி கவனிக்கும். இப்படியாக அது பாட்டியின் அன்பைப் பெற்றுவிட்டது. ஒரு தரம் ஒரு திருடன் வீட்டினுள் புக முயன்ற போது, ராகுலன் தான் குரைத்து எல்லோரையும் எழுப்பியது. அதன் பிறகு பாட்டி அதை வெகுவாகப் புகழ்ந்தாள். முன் ஜென்மத்தில் ராகுலன் அவளது குடும்பத்துக்குப் பணி செய்வதற்குத் தன்னையே அர்ப்பணித்திருக்க வேண்டும் என்றும், அதை நாங்கள் அலட்சியப்படுத்தினால் கடவுளுக்குப் பொறுக்காது என்றும் அவள் நம்பினாள். பாட்டி தன் இரவு உணவை ராகுலனுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினாள்.

ஒரு வருடத்திற்குள் ராகுலன் பெரிதாக வளர்ந்து விட்டது. ஒரு கரடியின் வலிமை அதற்கு இருந்தது. அதுக்கு பாலும், சோறும் ரொட்டியும் கொடுத்தோம். வாரம் ஒருமுறை சென்னா மாமிசம் தயாரித்தான். அது பின்கால்களில் எழுந்து நின்றால், என் அளவு உயரம் இருந்தது. அது மிக எச்சரிக்கையோடு காணப்பட்டது. ஒரு புல் அசைந்தால் கூட அது கண்டுகொள்ளும் தெரிந்தவர்களிடம் பிரியமாகவும் சாந்தமாகவும் பழகிய அது அந்நியர்களிடம் மூர்க்கமாக நடந்து கொள்ளும், ராகுலன் என் நண்பன், பாதுகாவலனும் கூட. அது என்னோடிருந்தால் நான் இரவில் கூடப் பயமின்றி வெளியே போகலாம். பாட்டியும் நானும் கோயிலுக்குப் போகும் போது அது எங்களோடு வரும், வாசலில் நாங்கள் விட்டுச் செல்கிற எங்கள் காலணிகளைக் காத்து நிற்கும். பாட்டி தரும் வாழைப் பழத்தையும் அது தின்னும்.

என் சிநேகிதி மாலதியின் தந்தை பெங்களுருக்கு மாற்றலாகிப் போனார். அவள் போவதற்குமுன் அவளிடமிருந்த நாய்குட்டி ஒன்றை எனக்குத் தந்தாள். அது பிறந்து பத்து நாட்களே ஆயின. அதற்கு நாங்கள் ராணி என்று பெயரிட்டோம். அது நிலாவில் வடித்தெடுத்தது போல் அப்பழுக்கற்ற வெள்ளை நிறம். அதன் கண்கள் வெளிர் நீல நிறம் பெற்றிருந்தன. இரண்டு நாய்களுக்கிடையிலும் எவ்வளவு வித்தியாசம்! ராகுலன் அடக்கப்படாத காட்டாள் மாதிரி இருந்தது. ராணியோ அமைதியுடன் சீமாட்டி போல் தோன்றியது. ராகுலன் கொந்தளிக்கும் கடல் போல் இருந்தது. ராணி சமதரையில் மெதுவாக நகரும் அமைதியான நீரோடை போல் காணப்பட்டது.

ஒரு துணை சேர்ந்ததில் ராகுலன் சந்தோஷம் அடையும் என நான் நம்பினேன். ராணியை அதனிடம் எடுத்துப் போய், "உன் ராணியைப் பார்" என்றேன். ராகுலன் உறுமியது. ராணி அதனிடமிருந்து பம்மியது.

69