காமக்குரங்கு
15
இளமையும் அழகும் கொண்ட பெண், அதிலும் ஒரு மிராசுதாரர் மகள், இப்படி ஒரு பொருத்தமற்ற கலியாணத்துக்கு ஒப்புக்கொண்டாள். இவனைக் கட்டிக் கொண்டு, இவள் வாழ்க்கையிலே எப்படிச் சுகமடைய முடியும்? என்ற கவலை அதிகமாகிவிட்டது. அந்தக் கவலையிலே என் கவலையைக்கூட மறந்துவிட்டேன்” என்று பேசியபடி, மதுரவல்லியின் கையைப் பரிவுடன் பிடித்து இழுத்து கட்டிலிலே, தன் பக்கத்திலே உட்கார வைத்துக் கொண்டு, எதிரே இருந்த பெரிய கண்ணாடியிலே தெரிந்த உருவங்களைக் காட்டி,
“இப்போது நாம் இருவரும் ஏறக்குறைய சகோதரிகள் போலிருக்கிறோமல்லவா?” என்று கேட்டுக்கொண்டே மதுரவல்லியை அணைத்துக் கொண்டாள். மதுரவல்லியின் ஆச்சரியம் இன்னும் அதிகமாகிவிட்டது.
“சாகசக்காரியடி நீ! என் கோபத்தைக்கூட மாற்றி விடுவாய் போலிருக்கிறதே!” என்று கேட்டுக் கொண்டே ஆடலழகியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள்.
“இதோ இப்போது, உன் விளையாட்டு எனக்கு எவ்வளவோ இன்பமாக இருக்கிறது. அப்பப்பா! நினைத்துக் கொண்டாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது, உன் கணவனின் சேஷ்டையை. வயதாகிவிட்டாலே ஆண்களுக்கு இப்படித்தான் பெண் பித்தம் தலைக்கேறிவிடும். குரங்குக் கூத்துக்கள் நடக்கும்” என்று சொன்னாள்.
“அடி! உன் பெயரைக் கூடக் கேட்க மறந்து விட்டேன். ஏதோ குழந்தைப் பருவ முதல் பழகியவர்கள்