காமக்குரங்கு
27
மின்சாரத்தால் தாக்குண்டவர் போலானார் மிட்டாதாரர். கோபம் பயத்துக்கு இடமளித்தது. “இவள் சாமான்யமானவளல்ல! பயம் காணோம்! பதறக்காணோம்! நடப்பது நடக்கட்டும் என்ற துணிவு கொண்டவளாக இருக்கிறாள்” என்று தோன்றிற்று. திகிலும் அதிகரித்தது. கடிதத்தைக் காட்டி, “நீதானே இதை எழுதினாய்?” என்று கேட்டார். “ஆமாம்” என்று சுருக்கமாகப் பதிலளித்தாள் மதுரவல்லி. “ஏன்” என்று மறுகேள்வி கேட்டார் மிட்டாதாரர். அறைக்கு வெளியே விழுந்தடித்து ஓடும்படி, வேகமாக கதவைச் சாத்தினாள். கதவு மோதி மிட்டாதாரர் அறைக்கு வெளியே விழ, கதவைத் தாழிட்டுக் கொண்டாள் மதுரவல்லி. கண்களிலே உதிரத் தொடங்கிய நீரையும் துடைக்கவில்லை.
விழா முடிவதற்குள், தனக்குப் பழக்கமான ஒரு உருப்படியைத் தேடிக்கொண்டு போயிருந்த மிராசுதாரர் மீனாட்சி சுந்தரர், மிட்டாவுக்கு அதே நேரத்தில் தான் வந்து சேர்ந்தார். மிட்டா மாளிகையிலே ஒரே அமர்க்களமாக இருக்கக் கண்டார். சதிராட வந்தவளுக்கும் மிட்டாதாரருக்கும் சண்டை என்று மட்டும் இருந்தால், விஷயம் விளங்கிவிட்டிருக்கும். மதுரவல்லிக்கும் மிட்டாதாரருக்கும் சண்டை என்றாலும் பொருள் விளங்கும். இந்தச் சண்டையோ மிட்டாதாரர், மதுரவல்லி, மலர்க்கொடி மூவருக்குள் என்கிறார்கள். இதற்கு அர்த்தமே விளங்கக் காணோம் என்று ஆச்சரியமடைந்த மிராசுதாரர், மிட்டாதாரரிடம் விஷய விளக்கம் கேட்டார். தகப்பனார் வந்த விஷயம் தெரிந்ததும், மதுரவல்லி அறையைவிட்டு வெளியே