பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமக் குரங்கு


முதல்தரமான குதிரை! கால் சுத்தமாக இருக்கின்றது. சவுக்கு ஒடுக்கவே தேவையில்லை. “டிராக்” கம்பீரமாக இருக்கிறது. பக்கத்திலே வண்டி வரும் சத்தம் கேட்டால் கண்களிலே ஒரு மிரட்சி. கால்கள் துடிக்கின்றன. காற்று வேகமாகக் கிளம்புகிறது. முகத்திலே களையும் இருக்கிறது. குதிரை சிலாக்கியமானதுதான். ஆனால் வண்டி மட்டும் ஏற்றதல்ல. ரப்பர் டயர் இருக்கிறது. ஆனால் குதிரையின் போக்கைச் சமாளிக்கும் சக்தி இல்லை வண்டிக்கு. வேறே வண்டியாக மட்டும் இருந்தால், ஜோர்தான்!

மிராசுதார் மீனாட்சிசுந்தரர் அலைந்து திரிந்து, பல சந்தைகளுக்கு ஆள்விட்டுப் பார்த்து, அதிக பொருட்செலவில் பெற்றார் அந்தக் குதிரையை! வண்டி, பரம்பரைச் சொத்து, விற்கவேண்டிய அவசியமில்லை. எனவே, புதிய புரவியைப் பழைய வண்டியிலே பூட்டினார். குதிரையின் விசேஷத்தைப் புகழ்ந்தவர்கள், வண்டியின் வளைவைக் கூறினர். மீனாட்சிசுந்தரரும் “ஆமாம்” என்றார். வேறு வண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். பட்டறையிலிருந்து புது வண்டி வருவதற்குள் பழைய வண்டியை உபயோகித்துக் கொண்டிருந்தார். வழக்கமாகவே குதூகலமாக வாழ்பவர். மிராசுதார், அவருக்கென்ன ஆனந்தத்துக்குக் குறைவா? அந்த ஊரே அவருடையது; ஆள் அம்பு ஏராளம், வருவாய் அமோகம். வாட்டம் ஏது? வருத்-