38
சிறுகதைகள்
“எனக்கு மட்டும் கொஞ்சம் சொத்து ஒரு சொந்த வீடு இருந்துவிட்டால், என் தங்கத்துக்கு ஏற்றவனாக ஒருவனைத் தேடிப் பிடித்துக் கலியாணம் செய்து வைக்க முடியும். கண்டேன் கண்டேன் என்று கைலாகு கொடுக்க எவரும் சம்மதிப்பார்கள். சுந்தரி, ஆப்பக்கடைகாரியின் பெண்ணாயிற்றே, எந்தத் தடியனோ, வெறியனோ, எவனோ ஒருவனுக்குத்தானே வாழ்க்கைப்பட்டாக வேண்டும்” என்று தனபாக்கியம் சொல்லவில்லை, அவளுடைய கண்ணீர், ஏற்கனவே தூசி நிரம்பிக் கிடந்த தலையணையை மேலும் அதிகமாக அழுக்காக்கி விட்டது.
“அழகான பெண், அடக்கமானவள், ஏதோ கொஞ்சம் படித்தும் இருக்கிறாள். ஏழைதான், இருந்தால் என்ன? நம் வீட்டில் உலாவினாலே போதும் கிருகலட்சுமியாக இருப்பாள். நமது பையனுக்கு ஏற்ற பொருத்தமான பெண் என்ன செய்வது? அவள் ஆப்பக்காரிக்கா பிறக்க வேண்டும்? அரசமரத்தை ஆறு வருஷம் சுற்றியும் பயனில்லாமல், அடுத்த தெருவிலே அழுதுகொண்டிருகிறாளே தாசில்தாரின் சம்சாரம் தில்லை, அவள் வயிற்றிலே பிறந்திருக்கக்கூடாதா? நமது பையனுக்குக் கலியாணம் செய்து கொள்ளலாமே” என்று லோகு முதலி சொல்லவில்லை. மனதிலே! இது போலப் பலமுறை அவர் நினைத்தார்; சொல்லவில்லை வெளியே. லோகு முதலி பணம் படைத்தவர், பெண் இழந்தவர். ஒரே மகன் அவருக்கு. ஒய்யாரமான பையன். அவனுக்குச் சுந்தரியிடம் மையல்.
“கனகு, ஏனப்பா, அடிக்கடி அந்த ஆப்பக்கடைக்கு போய் வருகிறாயாமே, அந்தப் பெண் சுந்தரியை