பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீர்ப்பளியுங்கள்!


ன் நண்பர், மாஜிஸ்ட்ரேட் மருதவாணம் பிள்ளை, கோர்ட்டிலே மட்டுந்தான் கோபமாகக் காணப்படுவார். அதைக்கூட அவர் கோபமென்று ஒப்புக்கொள்வதில்லை. நீதியின் உருவம்! – என்று கூறுவார். “என்னமோ மருது! நீதி இப்படி மிரட்டும் உருவிலே இருப்பது எனக்குப் பிடிப்பதில்லை” என்று நான் கூறுவதுண்டு – கோர்ட்டு நேரத்தில் அல்ல.

அன்று மாலை, மருதவாணம் பிள்ளை, என்னைக் கண்டதும் “வா, வா! உன்னைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். நாளைக்கு ஒரு வழக்கிலே தீர்ப்பளிக்க வேண்டும். உன்னிடம் அதைக் கூறி, உன் தீர்ப்பு என்ன என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்.

“இதுதானா எனக்கு வேலை! உனக்குத்தான் சர்க்காரிலே சம்பளம் தருகிறார்கள். சட்டத்தைப் படித்துச் சம்பவங்களை அலசி, துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்ய. எனக்கேன் அந்த வேலை?” என்று நான் கேலியாகக் கூறினேன்.

“உனக்கே மாஜிஸ்ட்ரேட் வேலை கிடைத்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளேன்” என்றார் மருதவாணம். மாலை வேளையிலே அவருக்கு இயல்பாகவே மலரும் மகிழ்ச்சியுடன்.

“எனக்கு அந்த வேலை கிடைத்தால் தானே!” என்று நான் கொஞ்சம் கம்பீரமாகக் கூறினேன். மருதவாணர் மாஜிஸ்ட்ரேட் குரலிலே ஆரம்பித்தார்.