பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

சிறுகதைகள்


“பெயர் மகாலிங்கம்; வயது முப்பது. தொழில் நிலையாக ஒன்றுமில்லை; குற்றச்சாட்டு, பித்தளைச் சங்கிலியைத் தங்கச் சங்கிலி என்று ஏமாற்றி விற்றான் – இதுதான் வழக்கு, இதிலே தீர்ப்புக் கூற வேண்டும்.”

“சரி! மகாலிங்கத்தின் வாக்குமூலம் என்ன?” என்று கேட்டேன், ஒரு அதிகாரி போலவே.

“அதிலே சிக்கல் ஒன்றும் இல்லை. அவன் ஒப்புக் கொள்ளுகிறான்” என்றார் மருதவாணம்.

“இவ்வளவுதானா? இதிலே யோசனைக்கு என்ன இடமிருக்கிறது? குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொள்ளுகிறான். உடனே சட்டப் புத்தகத்திலே, அந்தக் குற்றத்திற்காகச் செக்ஷன் என்ன, அதற்கான தண்டனை என்ன என்று பார்க்க வேண்டியது தானே. இதற்கு என்னைப் பரீட்சிக்க என்ன இருக்கிறது?” என்று நான் கூறினேன்.

“தங்கச் சங்கிலி என்று முலாம் பூசியதை விற்றிருக்கிறான்; ஒப்புக்கொண்டுமிருக்கிறான். சாட்சியங்களும், அதே போல அப்பழுக்கு இல்லை என்றாலும் இது சிக்கலான பிரச்சனை” என்றார் மருதவாணர்.

“வேடிக்கையாகவன்றோ நீர் பேசுகிறீர்” என்று நான் கொஞ்சம் மரியாதையாகவே சொன்னேன், நண்பரின் முகத்திலே, கோர்ட்டுக்களை தட்டுவது கண்டு. கொஞ்ச நேரம் மௌனமாகவே இருந்தார் மருதவாணர். கவலையுடன் காணப்பட்டார். எனக்கு ஏதாவது பேசி வைப்போம் என்ற எண்ணம் உண்டாயிற்று.

“மகாலிங்கம் என்ற ஆள் தெரிந்தவனா!” என்றேன் நான். உடனே மருதவாணரின் உடல் குலுங்கிற்று.